LSG vs CSK: பினிஷர் தோனி இஸ் பேக்.. முடித்து கொடுத்த துபே.. லக்னோவை வீழ்த்திய சென்னை கலக்கல்..!

Chennai Super Kings: ஐபிஎல் 2025ன் 30வது போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 166 ரன்கள் எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ், 167 ரன்கள் இலக்கை துரத்தி, தோனியின் சிறப்பான ஆட்டத்தால் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷேக் ரஷீத் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தொடக்கத்தில் சிறப்பாக ஆடினார்கள். இறுதி ஓவர்களில் தோனியின் அதிரடி ஆட்டம் வெற்றிக்குக் காரணமானது.

LSG vs CSK: பினிஷர் தோனி இஸ் பேக்.. முடித்து கொடுத்த துபே.. லக்னோவை வீழ்த்திய சென்னை கலக்கல்..!

எம்.எஸ்.தோனி - ஷிவம் துபே

Updated On: 

14 Apr 2025 23:34 PM

ஐபிஎல் 2025ன் (IPL 2025) 30வது போட்டியில் இன்று அதாவது 2025 ஏப்ரல் 14ம் தேதி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (Lucknow Super Giants) அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியும் லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் ஸ்டேடியத்தில் மோதியது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 167 ரன்கள் வெற்றி இலக்காக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயித்துள்ளது. லக்னோ அணிக்காக, கேப்டன் ரிஷப் பந்த் 49 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பந்த் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடித்தார். மிட்செல் மார்ஷ் 30 ரன்களும், ஆயுஷ் படோனி 22 ரன்களும், அப்துல் சமத் 20 ரன்களும் எடுத்தனர். இதன் காரணமாக லக்னோ அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது. சென்னை அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளையும், மதிஷா பதிரானா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

167 ரன்கள் இலக்கு:

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக 167 ரன்கள் இலக்கை துரத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ரச்சின் ரவீந்திரா மற்றும் ஷேக் ரஷீத் களமிறங்கினர். ஷர்துல் தாக்கூர் வீசிய முதல் ஓவரில் ரச்சின் ரவீந்திரா 2 பவுண்டரிகள் விரட்ட, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு ஓவரில் விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் எடுத்தது. அதை தொடர்ந்து, ஆகாஷ் தீப் வீசிய 2வது ஓவரில் அறிமுக வீரர் ஷேக் ரஷீத் மூன்று பவுண்டரிகள் அடித்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்கோர் இரண்டு ஓவர்கள் முடிவில் விக்கெட் எதுவும் இல்லாமல் 23 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து, இருவரும் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து 50 ரன்களை கடந்தனர். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய ஷேக் ரஷீத் 19 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக ராகுல் திரிபாதி உள்ளே வர, ஐடன் மார்க்ரம் பந்தில் ரச்சின் ரவீந்திர எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். மீண்டும் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட 5 ரன்களில் ராகுல் திரிபாதி பந்து வீசிய ரவி பிஷ்னோயிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

தொடக்கம் சரியாக அமைந்தபோதிலும் அடுத்த 30 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி, சென்னை சூப்பர் கிங்ஸ் மீது அழுத்தம் அதிகரித்தது. மூன்று விக்கெட்டுகள் விழுந்த பிறகு, ரவீந்திர ஜடேஜா மற்றும் சிவம் துபே என இரண்டு பேரும் அடிப்பார்கள் என ரசிகர்கள் நினைத்தனர். தொடர்ந்து, விக்கெட் விடக்கூடாது என்று பொறுமையாக ஆடிய ரவீந்திர ஜடேஜா 11 பந்துகளில் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

கலக்கிய தோனி:

விஜய் சங்கரும் 8 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, களத்தில் சிவம் துபேவுடன் எம்.எஸ்.தோனி கூட்டணி அமைத்தார். ஆவேஷ் கான் வீசிய 16வது ஓவரில் எம்.எஸ்.தோனி அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விரட்டி நம்பிக்கை கொடுத்தார். இதனால், சென்னை அணியின் வெற்றிக்கு 24 பந்துகளில் 44 ரன்கள் தேவையாக இருந்தது. 17 வது ஓவர் வீசிய ஷர்துல் தாக்கூர் பந்துகளை ஷிவம் துபே பவுண்டரி அடித்து எம்.எஸ். தோனிக்கு சிங்கிள் எடுத்து விட்டுக்கொடுக்க, அந்த ஓவரின் கடைசி பந்தில் ஒற்றை சிக்ஸர் அடித்து முடித்தார் தோனி. இதனால், கடைசி 18 பந்துகளில் சென்னை அணிக்கு 31 ரன்கள் தேவை என்ற சூழ்நிலை அமைந்தது.

ஆவேஷ் கான் வீசிய 18வது ஓவரின் முதல் துபே சிங்கிள் தட்ட, அடுத்த பந்தை பவுண்டரியாக விரட்டினார் தோனி. தொடர்ந்து துபே கட்டையைபோட, 12 பந்துகளில் 24 ரன்கள் தேவை என்ற நிலையில், ஷர்துல் பந்தில் துபே சிக்ஸர், பவுண்டரி விரட்ட, அதே ஓவரில் தோனியும் பவுண்டரி அடித்தார். 6 பந்துகளில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆவேஷ் கான் வீசிய கடைசி ஓவரில் சிங்கிள் மற்றும் பவுண்டரி அடித்து துபே முடித்து கொடுத்தார்.

தோனி 11 பந்துகளில் 26 ரன்களுடனும், துபே 37 பந்துகளில் 43 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.