Abhishek Nayar’s KKR Return: பிசிசிஐ அதிரடி முடிவுக்குபின் ஆச்சர்யம்! மீண்டும் KKR அணியில் இணைந்த அபிஷேக் நாயர்..!
BCCI Sacks Abhishek Nayar: ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடர் தோல்விக்குப் பின், இந்திய கிரிக்கெட் அணியின் உதவிப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் பிசிசிஐயால் பணி நீக்கம் செய்யப்பட்டார். பின்னர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவரை மீண்டும் பயிற்சியாளராக நியமித்துள்ளது. பிசிசிஐ இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. இந்திய அணியின் தொடர்ச்சியான தோல்விகள் காரணமாக இந்த மாற்றம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடர் தோல்விக்கு பிறகு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அதிரடியாக இந்திய பயிற்சியாளர் குழுவில் ஒரு சிலரை பணிநீக்கம் செய்தது. இதில், அபிஷேக் நாயரின் (Abhishek Nayar) பெயரும் ஒன்று. இது குறித்து வாரியத்தால் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடப்படவில்லை. இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சில நாட்களுக்கு பிறகு, அபிஷேக் நாயர் மீண்டும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) அணியில் இணைந்ததாக அதிகாரப்பூர்வ தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கொல்கத்தா அணி இந்த தகவலை சமூக ஊடகப் பதிவு மூலம் தெரிவித்துள்ளது.
மீண்டும் கொல்கத்தா அணியில் அபிஷேக் நாயர்:
அபிஷேக் நாயர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் மீண்டும் இணைந்துள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது பயிற்சிக் குழுவின் அபிஷேக் நாயரை சேர்ப்பதாக சமூக ஊடகப்பதிவு மூலம் அறிவித்துள்ளது. இருப்பினும், பயிற்சிக் குழுவில் அவர் என்ன பங்கு வகிப்பார் என்பதை நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி தெளிவுபடுத்தவில்லை. இந்திய அணியின் பயிற்சியாளராக இணைவதற்கு முன்பு அபிஷேக் நாயர், 2024 ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணி மூன்றாவது ஐபிஎல் பட்டத்தை வென்றபோது பேட்டிங் பயிற்சியாளராக இருந்தார்.
அபிஷேக் நாயரை நீக்கியது பிசிசிஐ:
Welcome back home, @abhisheknayar1 💜 pic.twitter.com/IwJQTnAWxa
— KolkataKnightRiders (@KKRiders) April 19, 2025
சமீபத்தில், இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளர் பதவியில் இருந்து அபிஷேக் நாயர் நீக்கப்பட்டார். அதனை தொடர்ந்து, பீல்டிங் பயிற்சியாளர் டி. திலீப் மற்றும் கண்டிஷனிங் பயிற்சியாளர் சோஹம் தேசாய் ஆகியோரையும் பிசிசிஐ நீக்கியது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்குப் பிறகு நடைபெற்ற மறு ஆய்வுக் கூட்டத்தின் போது, அணி நிர்வாகத்தில் நாயரின் பங்கு குறித்து பலரால் கேள்வி எழுப்பப்பட்டது. அதே நேரத்தில் வீரர்களிடமிருந்தும் கருத்துகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் இத்தனை ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் தலைமை பயிற்சியாளரால் தேர்ந்தெடுக்கப்பட்ட துணை ஊழியர்களின் ஒப்பந்தத்தை பிசிசிஐ ரத்து செய்தது இதுவே முதல் முறையாகும்.
2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன் பட்டத்தை வென்ற பிறகு, ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைந்தது. 2024ம் ஆண்டு கவுதம் கம்பீர் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றபோது, கொல்கத்தா அணியின் கவுதம் கம்பீருடன் இருந்த அபிஷேக் நாயர் பேட்டிங் பயிற்சியாளராக இந்திய அணியில் இணைந்தார். இருப்பினும், அணியின் பயிற்சி ஊழியர்கள் குறித்து எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பிசிசிஐ இன்னும் எதுவும் கூறவில்லை. ஆனால் இந்தியாவின் தொடர்ச்சியான மோசமான டெஸ்ட் செயல்திறன் காரணமாக இது நடந்ததாக கூறப்படுகிறது. 2024ம் ஆண்டில், இந்தியா நியூசிலாந்திடம் சொந்த மைதானத்தில் 0-3 என்ற கணக்கில் தொடரை இழந்தது. இதன் பிறகு, இந்திய அணி பார்டர்-கவாஸ்கர் டிராபியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1-3 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது.