Team India: இந்திய அணி துணை பயிற்சியாளர் அபிஷேக் சர்மா நீக்கம்.. வெடித்த சர்ச்சை
இந்திய அணியின் துணைப் பயிற்சியாளராக 8 மாதங்களே பணியாற்றிய அபிஷேக் நாயர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்திய அணியின் தொடர் தோல்விகள் மற்றும் சர்ச்சைகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளிடம் இந்தியா தோற்றது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி இழப்பு போன்றவை இதற்கு காரணங்களாகக் கூறப்படுகிறது.

அபிஷேக் நாயர்
இந்திய அணியின் (Team India) துணை பயிற்சியாளராக பணியாற்றி வந்த அபிஷேக் நாயர் (Abhishek Nayar) 8 மாதங்களிலேயே அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் கடும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது. இந்த தொடரோடு தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், பிற பயிற்சியாளர்களான விக்ரம் ரத்தோர் மற்றும் பராஸ் மாம்ப்ரே ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைந்தது. இதனையடுத்து இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் வீரர் கௌதம் காம்பீர் பொறுப்பேற்றார். இதேபோல் துணைப் பயிற்சியாளராக அபிஷேக் நாயர் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வந்தார்.
ஆனால் கௌதம் காம்பீர் பதவிக்கு வந்த பிறகு இந்திய அணி சர்வதேச போட்டிகள் சற்று சறுக்க ஆரம்பித்தது. நியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் 3-0 என்ற கணக்கில் இழந்தது. ஆஸ்திரேலியா அணியுடனான பார்டர் கவாஸ்கர் ட்ராபி தொடரை 3-1 என்ற கணக்கில் இழந்தது. இதனால் இந்திய அணியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற முடியவில்லை. இது மிகப்பெரிய அளவில் விமர்சனத்திற்குள்ளானது.
இந்திய அணியின் தொடர் சறுக்கல்
இப்படியான நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு ஏற்பட்ட சறுக்கல்களுக்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சியாளர்கள் குழுவில் உள்ள துணை பயிற்சியாளர் அபிஷேக் சர்மா, ஃபீல்டிங் பயிற்சியாளர் டி. திலீப், ட்ரெய்னர் சோஹம் ஆகியோர் மீது இந்த நடவடிக்கை பாயும் என கூறப்படுகிறது.
இதற்கிடையில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்குப் பிறகு பிசிசிஐ மறுஆய்வுக் கூட்டம் ஒன்றை நடத்தியது. இதில் செயலாளர் தேவஜித் சைகியா மற்றும் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா உள்ளிட்ட பிசிசிஐ வாரியத்தின் உயர் அதிகாரிகள் இந்திய அணியுடன் தொடர்புடைய முக்கிய உறுப்பினர்கள் மற்றும் தேசிய தேர்வாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது அபிஷேக் நாயர் ட்ரெஸ்ஸிங் அறையில் வீரர்களுடன் உரையாடுவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது வைக்கப்பட்டது.
பலரும் கடும் எதிர்ப்பு
ஆனால் இது தொடர்பாக அபிஷேக் நாயர் தரப்பில் எந்தவித பதிலும் இதுவரை வெளியாகவில்லை. அதேசமயம் பிசிசிஐ அமைப்பின் இந்த முடிவு குறித்து அவருக்கு முன்னதாகவே தெரிவிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இந்திய அணியின் ட்ரெயினராக ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக பங்காற்றி வரும் ஏட்ரியன்லி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் பேட்டிங் பயிற்சியாளராக சிதான்ஷூ கோடக் வருகை தந்திருக்கிறார்.
இந்த நிலையில் அபிஷேக் சர்மாவை நீக்கும் முடிவுக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிசிசிஐ முட்டாள்தனமான முடிவெடுப்பதாக காட்டமாக பதிவிட்டுள்ளனர். இந்திய அணி அடுத்ததாக 2025, ஜூன் மாதம் 20 ஆம் தேதி இங்கிலாந்து எதிராக தொடங்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களமிறங்கவுள்ளது. அதற்குள் அணியை கட்டமைக்க வேண்டும் என பிசிசிஐ விரும்புவதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.