BCCI Central Contract 2025: மீண்டும் ஏ பிளஸில் ரோஹித், கோலி.. மத்திய ஒப்பந்தத்தை அறிவித்த பிசிசிஐ.. இந்திய வீரர்களுக்கு சம்பளம் இவ்வளவா..?

India Cricket Central Contracts 2024-25: பிசிசிஐ 2024-25 சீசனுக்கான மத்திய ஒப்பந்தத்தை வெளியிட்டுள்ளது. ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் ஏ பிளஸ் பிரிவில் இடம் பெற்றுள்ளனர். ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் மீண்டும் ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளனர். ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்ட சிலர் வெளியேற்றப்பட்டுள்ளனர். மொத்தம் 34 வீரர்கள் ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளனர்.

BCCI Central Contract 2025: மீண்டும் ஏ பிளஸில் ரோஹித், கோலி.. மத்திய ஒப்பந்தத்தை அறிவித்த பிசிசிஐ.. இந்திய வீரர்களுக்கு சம்பளம் இவ்வளவா..?

இந்திய கிரிக்கெட் அணி

Published: 

21 Apr 2025 14:35 PM

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) 2024 – 25 சீசனுக்கான மத்திய ஒப்பந்தத்தை (Central Contract 2025) வெளியிட்டுள்ளது. அதன்படி, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் கேப்டன் ரோஹித் சர்மா (Rohit Sharma), விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரை மீண்டும் ஏ பிளஸ் பிரிவில் பிசிசிஐ தக்க வைத்துள்ளது. பொதுவாக, மூன்று வடிவங்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்களுக்கு மட்டுமே ஏ பிளஸ் பிரிவில் இடம் பெறுவார்கள். அதேநேரத்தில், இந்த பட்டியலில் 4வது வீரராக ஜஸ்பிரித் பும்ரா இடம் பெற்றுள்ளார். இவர் மட்டுமே தற்போது இந்திய அணிக்காக மூன்று வடிவங்களிலும் விளையாடி வருகிறார். மொத்தமாக மத்திய ஒப்பந்தத்தில் 34 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் யார் யார் என்ற முழு பட்டியலையும் இங்கே தெரிந்து கொள்வோம்.

மீண்டும் மத்திய ஒப்பந்தத்தில் இடம்பெற்ற ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன்:

கடந்த 2024ம் ஆண்டு உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடாததற்காக ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் மீது பிசிசிஐ அதிரடியாக நடவடிக்கை மேற்கொண்டது. இதன் காரணமாக, இவர்கள் இருவரையும் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டனர். இருப்பினும், ஷ்ரேயாஸ் ஐயர் இந்த நடவடிக்கைக்கு பிறகு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இடம் பெற்று அற்புதமாக செயல்பட்டார். இதனால், ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் மத்திய ஒப்பந்தத்தில் இடம் பெறுவார் என்று நம்பப்பட்டது. இதற்கிடையில், இஷான் கிஷனும் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடிதால், பிசிசிஐ மீண்டும் மத்திய ஒப்பந்தத்தில் சேர்த்து கொண்டது.

யார் யார் வெளியேற்றம்..?

மத்திய ஒப்பந்தத்தில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின், ஷர்துல் தாக்கூர், ஜிதேஷ் சர்மா, கே.எஸ்.பரத் மற்றும் அவேஷ் கான் ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதற்கு காரணம், ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபத்தில் அனைத்துவிதமான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனால், தானாக இந்த பட்டியலில் இருந்து வெளியேறுவார். அதேநேரத்தில், அஸ்வினை தவிர மற்ற வீரர்கள் சமீப காலமாக இந்திய அணிக்காக விளையாடவில்லை. இதனால் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டனர்.

மத்திய ஒப்பந்தம் பெறும் வீரர்களின் பட்டியல்:

ஏ பிளஸ் பிரிவு:

ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா

ஏ பிரிவு:

முகமது சிராஜ், கேஎல் ராகுல், சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி, ரிஷப் பண்ட்

பி பிரிவு:

சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், அக்சர் படேல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷ்ரேயாஸ் ஐயர்

சி பிரிவு:

ரிங்கு சிங், திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட், சிவம் துபே, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ரஜத் படிதார், துருவ் ஜூரல், சர்ஃபராஸ் கான், நிதிஷ் குமார் ரெட்டி, இஷான் கிஷன், அபிஷேக் ஷர்மா, ஆகாஷ் தீப், வருண் சக்கரவர்த்தி, ஹர்சித் ராணா.

எவ்வளவு சம்பளம்..?

வருடத்திற்கு பிசிசிஐ மத்திய ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ள A+ வீரர்களுக்கு ரூ.7 கோடியும், A பிரிவு வீரர்களுக்கு ரூ.5 கோடியும், B பிரிவு வீரர்களுக்கு ரூ.3 கோடியும், C பிரிவு வீரர்களுக்கு ரூ.1 கோடியும் வழங்கும். இது தவிர, வீரர்கள் தாங்கள் விளையாடும் ஒரு போட்டிக்கான போட்டித்தொகையையும் பெற்று கொள்வார்கள்.