Vastu Tips: வீட்டில் சீரான நிதி நிலைமை இருக்க வேண்டுமா? – வாஸ்து டிப்ஸ் இதோ!
வாஸ்து சாஸ்திரப்படி, வீட்டின் வடகிழக்கு மூலையை நேர்மறை ஆற்றலுக்கான இடமாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். அங்கு குபேர இயந்திரம் அல்லது கண்ணாடி வைப்பதாலும், தென்மேற்கு திசையில் நிதி ஆவணங்களை வைத்தாலும் செல்வச் செழிப்பை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. இதுதொடர்பான சில தகவல்களைக் காணலாம்.

வாழ்க்கையில் அனைத்து நிலைமைகளுக்கும் அடிப்படையாக இருப்பது பணம் (Money) என்பது பலரின் கூற்றாக உள்ளது. சில்லறை காசு தொடங்கி உயர்ந்த ரூபாய் நோட்டுகள் வரை அனைத்தும் உழைப்பால் நம்மிடம் வந்து சேர்கிறது. பணத்தை நாம் சரியாக பராமரிக்க வேண்டும் என்பதில் அனைவரும் கவனமாக இருக்கிறார்கள். உழைப்பு ஒரு புறம் இருக்கையில் மறுபக்கம் அதிர்ஷ்டமும் உடனிருக்க வேண்டும் என சாஸ்திரங்கள் தெரிவிக்கிறது. ஜோதிடத்தின்படி (Astrology) வருமானம் செல்வ செழிப்பு பணப்புழக்கம் ஆகியவற்றிற்கு நம்முடைய கிரகங்களின் பெயர்ச்சி மட்டுமல்லாமல் வாஸ்து சாஸ்திரமும் ஒரு காரணமாக அமைகிறது என தெரிவிக்கப்படுகிறது. அப்படியாக வாஸ்து சாஸ்திரத்தின் படி பொருளாதார ரீதியில் நாம் சிறந்து விளங்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
வாஸ்து சாஸ்திரப்படி ஒரு வீட்டை எடுத்துக் கொண்டால் அதன் நுழைவு வாயில் கதவு நேர்மறை ஆற்றலை வெளிப்படுத்தி செல்வ செழிப்பை ஊக்குவிக்கும் இடமாக உள்ளது. எனவே இந்த கனவில் எந்தவித பிரச்சனைகளும் ஏற்படாமல் நல்ல விதத்தில் பராமரிக்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்யவும். மேலும் துருப்பிடித்த பூட்டு அல்லது உடைந்த நிலையிலான கைப்பிடிகள் இருந்தால் உடனே அதனை மாற்றவும்.
செல்வத்தின் அதிபதியான குபேரர்
இந்திய புராணங்களின்படி, குபேரர் செல்வத்தின் அதிபதியாக திகழ்கிறார். வடகிழக்கு திசை குபேரக் கடவுளால் ஆளப்படுவதாக நம்பப்படுகிறது. எனவே எக்காரணம் கொண்டும் வீட்டில் வடகிழக்கு பக்கத்தில் கழிப்பறைகள், ஷூ ரேக்குகள் மற்றும் தடிமனான பொருட்கள் போன்ற எதிர்மறை ஆற்றலை பரப்பும் பொருட்கள் இடம் பெறுவதை தவிர்க்க வேண்டும். வீட்டின் வடகிழக்கு மூலையை நேர்மறை ஆற்றலுக்கான இடமாக வைக்க வேண்டும்.
வீட்டின் வடகிழக்கு சுவரில் முடிந்தவரை ஒரு கண்ணாடி அல்லது குபேர இயந்திரத்தை வைப்பது புதிய நிதி வாய்ப்புகளை செயல்படுத்தும் என்று நம்பப்படுகிறது. அதேபோல் தென்மேற்கு திசை நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் இடமாக உள்ளது. எனவே நகைகள், பணம் மற்றும் முக்கியமான நிதி ஆவணங்களை இருந்தால் அதனை வைக்கும் அலமாரிகளை அந்த திசையில் வடக்கு அல்லது வடகிழக்கு திசையை நோக்கி வைக்கவும். எக்காரணம் கொண்டும் தெற்கு அல்லது மேற்கு நோக்கி வைக்க வேண்டாம். அது நிதிச்சிக்கலை ஏற்படுத்தும்.
நேர்மறை ஆற்றலை அதிகரிக்க டிப்ஸ்
வீட்டின் வடகிழக்கு பகுதியில் சிறிய நீர் நிலைகளை வைப்பது நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. எனவே அங்கு மீன் தொட்டி அல்லது சிறிய நீரூற்று வைக்கலாம். இவை மங்களகரமானதாகக் கருதப்படும் என்பதால் அதில் தண்ணீர் சுத்தமாகவும், தேங்கி நிற்காமலும் இருப்பதை உறுதி செய்யவும். அதேபோல் சமையலறை, குளியலறை அல்லது தோட்டத்தில் நீர் கசிவுகள் நிதி இழப்பைக் குறிக்கும் என்பதால் அதனை உடனே சரி செய்ய வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.
வீட்டுக்கான தண்ணீர் தொட்டியை வடகிழக்கு அல்லது தென்கிழக்கு மூலைகளில் அமைக்க வேண்டாம். பெரிய நீர் ஆதாரம் அங்கு இருந்தால் வாழ்க்கையில் அழுத்தம் அதிகரிப்பதோடு ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும் என சொல்லப்படுகிறது. கடுமையான தலைவலி, மார்பு வலி, வயிற்று பிரச்சினைகள் மற்றும் மனநலக் குறைபாடு ஆகியவை ஏற்படும் என கூறப்படுகிறது.
கழிப்பறைகள் மற்றும் குளியலறைகள் நிதி உறுதியற்ற தன்மை, உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் தூக்கமின்மைக்கு வழிவகுக்கலாம். வடமேற்கு அல்லது வடகிழக்கு பகுதிகளில் கழிப்பறைகள் மற்றும் குளியலறைகளை தனித்தனியாகக் கட்டுவது சிறந்தது. இடமிருக்கிறது என மூலைகளில் கட்ட வேண்டாம். இதனையெல்லாம் சரியாக பின்பற்ற வேண்டும் என வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது.