Tiruchendur: அள்ள அள்ள குறையாத பொக்கிஷம்.. திருச்செந்தூர் நாழிக்கிணறு சிறப்புகள்!
திருச்செந்தூர் முருகன் கோயிலில் உள்ள நாழிக்கிணறு, முருகனின் வேலால் உருவாக்கப்பட்ட புனித தீர்த்தமாக அறியப்படுகிறது. வற்றாத நீரூற்று என அறியப்படும் இது, பக்தர்களுக்கு புனித நீராடும் இடமாக உள்ளது. இங்கு வருகை தரும் பக்தர்கள் கடலில் நீராடிய பின் நாழிக்கிணறில் நீராடுவது வழக்கமாக உள்ளது.

நாழிக்கிணறு
பொதுவாக இந்தியா ஆன்மிக தலங்கள் நிறைந்த பூமியாக உள்ளது. ஒவ்வொரு வழிபாட்டு தலங்களும் தனக்கென தனி சிறப்பையும் கொண்டுள்ளது. அந்த வகையில் தமிழ்க்கடவுள் முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் (Tiruchendur Murugan Temple) என்பது மிகப்பிரபலமான ஆன்மிக தலமாக உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இங்கு வருபவர்கள் கடலில் நீராடுவது மட்டுமல்லாமல் அருகிலிருக்கும் புனித தீர்த்தமான நாழிக்கிணற்றிலும் (Nazhikinaru) நீராடி மகிழ்கிறார்கள். அதன் சிறப்புகள் பற்றி காணலாம். பொதுவாக நாழி என்பது ஒரு அளவை குறிக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும். கிணறு என்பது தண்ணீர் ஊற்றெடுக்கும் ஒரு இடமாகும். ஒரு கிணறை தோண்ட வேண்டும் என்றால் ஆயுதம் வேண்டுமல்லாவா? . அந்த ஆயுதம் தான் முருகன் கையில் இருக்கும் வேலாகும்.
முருகப்பெருமான் சிவனை பூஜிக்க வேண்டும் என நினைக்கிறார். ஐந்து சிவலிங்கங்களை வைத்து பூஜை செய்கிறார். இன்றைக்கும் திருச்செந்தூர் சென்றால் சுவாமிக்கு பின்னால் பஞ்சலிங்கம் இருப்பதைக் காணலாம்.
வற்றாமல் இருப்பது அதிசயம்
ஒரு பூஜை செய்ய வேண்டும் என்றால் தீர்த்தம் மற்றும் பூ ஆகிய இரண்டும் மிக முக்கியமானதாகும். அப்படியான நிலையில் முருகப்பெருமான் கையில் பூ இருந்த நிலையில் தீர்த்தம் வேண்டும் என்பதற்காக அந்த வேலினால் உருவாக்கிய இடம் தான் இன்றைக்கும் பலரையும் அதிசயத்தில் ஆழ்த்தும் “நாழிக்கிணறு” ஆகும். அந்த தீர்த்தம் இன்று வரை வற்றாமல் இருப்பது அதிசயம் தான்.
நாழிக்கிணறைப் பற்றி திருச்செந்தூர் ஸ்தல புராணத்தில் பல விஷயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியாக அந்த இடம் சொர்க்கத்திற்கான வழியாகும். அந்த தீர்த்தத்தில் நீராடினால் இதுவரை ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் செய்த பாவங்கள் அனைத்தும் அவனை விட்டு விலகும் என சொல்லப்பட்டுள்ளது. அதேபோல் பக்கத்தில் இருக்கும் கடலும் ஒரு மகா தீர்த்தமாகும். திருச்செந்தூர் செல்பவர்களுக்கு ஒரு சந்தேகம் இருக்கும். அதாவது முதலில் கடலில் குளிக்க வேண்டுமா? அல்லது நாழிக்கிணற்றில் குளிக்க வேண்டுமா? என்பது தான்.
முருகன் வேலினால் உருவான தீர்த்தம்
முதலில் நாம் கடலில் தான் குளிக்க வேண்டும். பின்பு நாழிக்கிணற்றில் நீராட வேண்டும். ஆனால் இரண்டிலும் கண்டிப்பாக நீராட வேண்டும் என சொல்லப்படுகிறது. நாழிக்கிணற்றில் வரும் நீர் இன்றளவும் சுவை குன்றாமல் உள்ளது. அருகில் அவ்வளவு பெரிய கடல் இருந்தாலும் இந்த நீரின் சுவை தனித்துவமாக இருக்கும். தமிழ்நாட்டில் திருச்செந்தூர் மற்றும் திருச்சி வயலூரில் தான் முருகனின் வேலினால் உருவாக்காப்பட்ட தீர்த்தம் உள்ளதாக நம்பப்படுகிறது.
காயத்ரி மந்திரத்தின் அடிப்படையில் 24 வகையான தீர்த்தங்கள் திருச்செந்தூரில் இருந்ததாக சொல்லப்பட்டாலும் இதுவரை நாழிக்கிணறு மட்டுமே செயல்பட்டு வருகிறது. இங்கு நீராடினால் ஞானம் பெறலாம் என்றும், வாழ்க்கையில் சகல நன்மைகளையும் பெறுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது. நாழிக்கிணற்றில் நீராட கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், மக்கள் சிரமத்தை பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் இன்று நீராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
(இணையத்தில் பதிவிடப்படும் ஆன்மிக தகவல்கள் அடிப்படையில் இந்த செய்தியானது கொடுக்கப்பட்டுள்ளது. இதன் உண்மைகளின் துல்லியதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)