Sani Peyarchi 2025: சனிப்பெயர்ச்சியால் அவதியா? – பக்தர்களின் நம்பிக்கையாக திகழும் சனீஸ்வரர் கோயில்!
2025 மார்ச் 29 அன்று சனி பகவான் கும்பத்திலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். சனி பெயர்ச்சியின் தாக்கம் காரணமாக 12 ராசிகளிலும் பல்வேறு விதமான மாற்றங்கள் நிகழலாம். அதேசமயம் தேனி மாவட்டம் குச்சனூரில் உள்ள புகழ்பெற்ற சனீஸ்வரர் கோயிலில் இந்த காலக்கட்டத்தில் வழிபட்டால் சனிப்பெயர்ச்சியால் ஏற்படும் தாக்கங்கள் குறைவாக இருக்கும் என நம்பப்படுகிறது,

கிரகங்களின் பெயர்ச்சி என்பது நம்முடைய வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்வாக ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிரகங்களில் சனிப்பெயர்ச்சி என்பதின் மிகவும் முக்கியமான ஒன்று. அதன் அதிபதியான சனி பகவான் (Shani Dev) கொடுக்கவும் செய்வார் கெடுக்கவும் செய்வார் என சொல்லப்படுகிறது. சனிப்பெயர்ச்சி (Sani Peyarchi 2025) வந்தாலும் அனைத்து ராசிகளும் அலர்டாக இருப்பார்கள். காரணம் எந்த ராசிக்கு என்ன நடக்கிறது என்பதை கணிக்க முடியாத அளவுக்கு சனிப்பெயர்ச்சியின் 2 1/2 வருட காலமானது இருக்கும். இப்படியான நிலையில் 2025 ஆம் ஆண்டு சனிப்பெயர்ச்சி மார்ச் 29ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த முறை கும்ப ராசியிலிருந்து சனிபகவான் மீன ராசிக்கு செல்ல உள்ளார். பொதுவாக அனைத்து கோயில்களிலும் சனி பகவானுக்கு என நவக்கிரக சன்னதிகளில் இடம் இருக்கும். தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் சனீஸ்வரனுக்கு என புகழ்பெற்ற கோயில்கள் உள்ளது. அவற்றில் ஒன்றுதான் தேனி மாவட்டம் குச்சனூரில் அமைந்துள்ள அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோயில் (Kuchanur Sri Saneeswaran Kovil) ஆகும். அதனைப் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.
இந்தக் கோயில் ஆனது காலை 6 மணி முதல் 12 மணி வரையும் மாலையில் 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும். தமிழ்நாட்டில் திருநள்ளாறுக்கு அடுத்தபடியாக குச்சனூரில் இருக்கும் இந்த கோயில்தான் மிகவும் புகழ்பெற்றதாகும்.
கோயில் உருவான கதை
குழந்தை வரம் வேண்டி இறைவனிடம் தினகரன் என்ற மன்னன் வேண்டிக் கொண்டான். அப்போது அசசரீ ஒன்று அவனுக்கு கேட்டது. அதன்படி ஒரு பிராமண சிறுவன் உன் வாழ்க்கையில் வந்த பிறகு உனக்கு குழந்தை பிறக்கும் என தெரிவித்தது. அப்படியே வந்த சிறுவனுக்கு சந்திரவதனன் என பெயரிட்டு தினகரன் வளர்த்தான். அரசிக்கும் அசசரீ சொன்னபடி குழந்தை பிறந்து அந்த குழந்தை சதாகன் என்ற பெயருடன் வளர்ந்தான். சந்திரவதனனுக்கு முடி சூட்டப்பட்ட நிலையில் மன்னர் தினகரனுக்கு ஏழரை சனி பிடித்தது.
இதனால் கவலை கொண்ட சந்திரவதனன் சுரபி நதிக்கரைக்கு சென்று இரும்பால் சனியின் உருவத்தை படைத்து வழிபட்டான். வளர்ப்பு மகனான எனக்கு தந்தைக்கான துன்பத்தை கொடுத்து விடு என வேண்டிக்கொண்டான்.
சனீஸ்வர பகவான் அவனின் நியாயத்தை உணர்ந்து ஏழரை நாழிகை மட்டும் சந்திரவதனனுக்கு சனிபிடிக்கும் படி செய்தார். அந்த கால நேரத்தில் பல கஷ்டங்களை கொடுத்தார். இதனை அடுத்து அவன் முன் தோன்றிய சனீஸ்வர பகவான் உன்னை போன்று நியாயமானவர்களை நான் பிடிக்க மாட்டேன். இப்போது உன்னை பிடித்ததற்கு காரணம் உன் முன் ஜென்ம வினை என்று கூறி மறைந்தார். இதனை தொடர்ந்து சந்திரவதனன் இந்த ஊரில் கூரை வேந்து சனீஸ்வர பகவானுக்கு கோயில் எழுப்பினான். குச்சிப்புல்லால் அந்த கூரை வேயப்பட்ட நிலையில் இந்த ஊருக்கு குச்சனூர் என பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது.
சுயம்புவாய் எழுந்தருளிய சனிபகவான்
இந்த கோயில் சனிபகவான் சுயம்புவாய் எழுந்தருளியுள்ள தலமாகும். சனி தோஷம் உள்ளவர்கள் இந்த கோயிலில் வழிபட்டால் அந்த காலகட்டம் மிகவும் சிறப்பாக இருக்கும் என்பது நம்பிக்கையாகும். இந்த கோயிலில் காகத்திற்கு முதல் மரியாதை என்பதால் ஒவ்வொரு நாளும் மூன்று கால பூஜைகளும் தவறாமல் நடைபெறுகிறது. பூஜை முடிந்த பின்னர் காகத்திற்கு உணவு வைக்கப்படும். அதனை காகம் உண்ணாவிட்டால் அன்றைய தினம் தடையாக கருதப்பட்டு மீண்டும் அர்ச்சகர்கள் மன்னிப்பு கேட்டு மறுபடியும் உணவு வைப்பர்.
காகம் சாப்பிட்ட பிறகு தான் பக்தர்களுக்கு பரிமாறப்படும். இந்த கோயிலுக்கு வருகை தருபவர்கள் எள் விளக்கு போடுதல், காகத்துக்கு அன்னமிடுதல் ஆகியவற்றை மேற்கொள்ளலாம். அதேபோல் அன்னதானமும் செய்யலாம். புதிய தொழில் தொடங்குபவர்கள், வியாபார விருத்தி மற்றும் குடும்ப ஆரோக்கியத்தில் வேண்டுகிறவர்கள் கோயிலுக்கு வந்து வழிபடலாம்.
(இணையத்தில் உலா வரும் தகவல்கள் அடிப்படையில் இந்த கோயில் பற்றி எழுதப்பட்டுள்ளது. இதிலுள்ள தகவல்களின் துல்லியத்திற்கு TV9 Tamil எவ்விதத்திலும் பொறுப்பேற்காது)