Thayumanavar Temple: தாயாக மாறி பிரசவம் பார்த்த சிவன்.. இந்த கோயில் பற்றி தெரிஞ்சுகோங்க!
திருச்சி மலைக்கோட்டையில் வீற்றிருக்கும் தாயுமான சுவாமி கோயில் குழந்தை பாக்கியம் வேண்டி பக்தர்கள் அதிகம் வரும் கோயிலாக உள்ளது. இந்த கோயிலின் வரலாறானது ஆதிசேஷன்-வாயு பகவான் போட்டி, திரிசிரன் தவம், சிவன் அருள் போன்றவை உள்ளடக்கிறது. மேலும் இந்த கோயில் பற்றிய சிறப்புகளை காணலாம்.

மனித சக்திக்கு (Man Power) எட்டாத விஷயங்கள் உலகில் எத்தனையோ உள்ளது. என்னதான் தொழில்நுட்பங்கள் (Technology) அசுர வேகத்தில் வளர்ந்திருந்த போதும் மனித அறிவுக்கு புலப்படாத விஷயங்கள் இன்றளவும் உள்ளது. அதில் ஒன்றுதான் குழந்தை பாக்கியம். என்னதான் மகிழ்ச்சியாக இல்லற வாழ்க்கை இருந்தாலும் குழந்தை பாக்கியம் இல்லாவிட்டால் அங்கு சோகம் தான் நிறைந்திருக்கும். எத்தனையோ தம்பதிகள் திருமணம் ஆகி நீண்ட ஆண்டுகள் ஆனாலும் குழந்தை பாக்கியம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். தற்காலத்தில் அதற்கான சிகிச்சைகள் வந்துவிட்டாலும் அனைவரின் பொது நம்பிக்கையாக இருப்பது கடவுளிடம் முறையிடுவது மட்டும்தான். அப்படியாக ஒரு கோயிலுக்கு சென்று வேண்டிக் கொண்டால் நிச்சயம் தம்பதியினர் வாழ்க்கையில் குழந்தை பாக்கியம் கிட்டும் என இன்றளவும் பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர். அந்தக் கோயில் திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது. அதுதான் தாயுமான சுவாமி திருக்கோயில் (Sri Thayumanavar Temple) ஆகும்.
இந்தக் கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். அதேபோல் மாலையில் 4 மணி முதல் இரவு 8:30 மணி வரை திறந்திருக்கும். தாயுமானவர் கோயிலை கடந்து தான் நாம் மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையாரை தரிசிக்க முடியும். இத்தகைய கோயிலில் சிறப்புகள் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.
கோயில் உருவான வரலாறு
இந்தக் கோயில் உருவான வரலாறு எனப் பார்த்தால் ஒருமுறை ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்கும் இடையே தங்களில் யார் பெரியவன் என போட்டி ஏற்பட்டுள்ளது. ஆதிசேஷனை மீறி தான் கைலாய மலையை பெயர்ப்பேன் என வாயு பகவான் சொல்ல அவர்களுக்குள் போட்டி வைத்துக் கொண்டனர். அப்படியாக பெயர்க்கும் போது கைலாயத்தின் ஒரு பகுதி இத்தலத்தில் விழுந்ததாக கூறப்படுகிறது. அப்போது இந்த மலையில் மூன்று தலைகளைக் கொண்ட திரிசிரன் என்ற அசுரன் சிவனை வேண்டி தவமிருந்து வந்தான்.
பல்லாண்டுகள் தவம் இருந்தும் அவனை சோதிப்பதற்காக கூட சிவன் காட்சி தரவில்லை. ஒரு கட்டத்தில் அசுரன் தனது இரண்டு தலைகளை கழற்றி தீக்குண்டத்தில் போட்டுவிட்டு மூன்றாவது தலையையும் போட எண்ணினான். அவனது பக்தியை கண்டு மெய்சிலிர்த்த சிவன் இழந்த இரு தலைகளையும் மீண்டும் பெற அருள் பாலித்தார். பின்பு அசுரனின் வேண்டுதலுக்காக இங்கேயே பக்தர்களுக்கு அருள் பாலித்து வருவதாக கூறப்படுகிறது. திரிசிதநாதர் என பெயர் பெற்ற அந்த சிவன் இருந்த இடம் திரிச்சிராமலை என அழைக்கப்பட்டது. பின்பு திருச்சிராப்பள்ளி, திருச்சி என மருவி விட்டதாக கூறப்படுகிறது.
தாயாக இருந்து பிரசவம் பார்த்த சிவபெருமான்
அதேபோல் அந்த ஊரில் தனக்குத்தன் என்ற வணிகர் ஒருவர் வசித்து வந்தார். அவருடைய மனைவியான ரத்னாவதி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் உதவிக்காக தனது தாயை அழைத்திருந்தாள். தாயும் மகள் வீட்டிற்கு கிளம்பிய நிலையில் வழியில் காவிரி வெள்ளம் பெருக்கெடுத்ததால் குறித்த நேரத்தில் வீடு வந்து சேர முடியவில்லை. அதற்குள் தனகுத்தனின் மனைவி ரத்னாவதிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அவள் தன்னையும் குழந்தையும் காப்பாற்றுமாறு திரிசிரநாதரிடம் வேண்டினாள்.
இதனை எடுத்து திரிசிரநாதர் ரத்னாவதியின் தாயின் வடிவில் சென்று பிரசவம் பார்த்தார். காவிரி ஆற்றில் ஒரு வாரம் வரை வெள்ளம் ஓடிய நிலையில் அதுவரை தாயின் இடத்திலிருந்து சிவபெருமான் அந்த பெண்ணிற்கு செய்ய வேண்டிய கடமைகளை ஆற்றினார். வெள்ளம் தணிந்த பிறகு வீட்டிற்கு வந்த ரத்னாவதியின் தாய் தன்னுடைய உருவில் வீட்டில் மற்றொருவர் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது சிவன் ரத்னாவதிக்கும் அவரது தாயாருக்கும் சுயம்பு வடிவில் காட்சி கொடுத்தது நான் தாயாக இருந்து அருளியதால் இவர் தாயுமானவர் என அழைக்கப்படுகிறார் எனவும் வரலாறு சொல்கிறது.
கோயிலின் சிறப்புகள்
இந்த கோயிலில் விநாயகர் செவ்வந்தி விநாயகர் என பெயருடன் அழைக்கப்படுகிறார். இந்தக் கோயில் தென் கைலாயம் என சிறப்பு பெற்றது. சித்திரையில் பிரம்மோற்சவம் பங்குனி மாதத்தில் தெப்ப உற்சவம் ஆடி மாதத்தில் பூரம் ஐப்பசியில் அண்ணா அபிஷேகம் திருக்கார்த்திகை பொங்கல் சிவராத்திரி ஆகியவை இந்த கோயிலில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் மேலும் பங்குனி மாதத்தில் மூன்று நாட்கள் மட்டும் மாலையில் தாயுமானவர் சுவாமி மீது சூரிய ஒளி விழும் சிறப்பான நிகழ்வை காண பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகிறார்கள் சிவனின் தேவாரப் பாடல் பெற்ற 224 ஆலயங்களில் இது 69ஆவது சிவாலயமாகும்.
இந்த கோயிலில் வேண்டிக் கொள்பவர்கள் சிவன் மற்றும் அம்பாளுக்கு பாலாபிஷேகம் செய்து வாழைத்தார் படைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். மலைக்கோட்டைக்கு செல்லும் பெரும்பாலானோர் உச்சிப் பிள்ளையாரை மட்டுமே வணங்கி வருகின்றனர். ஆனால் தாயுமான சுவாமியையும் வணங்கினால் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும் என்பது பக்தர்களின் ஐதீகமாக உள்ளது.