ஆன்மீகத்தில் பச்சை கற்பூரத்தின் முக்கியத்துவம்.. இதெல்லாம் தெரியுமா?
பச்சை கற்பூரம், காம்ஃபர்லால் தாவரத்திலிருந்து பெறப்படும் ஒரு பொருள். இது சமையலிலும், பூஜையிலும், மருத்துவத்திலும் பயன்படுகிறது. வீட்டில் பச்சை கற்பூரம் வைப்பது செல்வம், மகிழ்ச்சி, எதிர்மறை சக்திகளிலிருந்து பாதுகாப்பு ஆகியவற்றைத் தரும் என நம்பப்படுகிறது. நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கவும் இதனைப் பயன்படுத்தலாம்.

பொதுவாக உணவில் சேர்க்கும் சில பொருட்கள் பூஜை வழிபாட்டிலும் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக மஞ்சள் கூறலாம். அந்த வகையில் பச்சை கற்பூரமும் (Pachai Karpooram) சமையலில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேசமயம் இது இறை வழிபாட்டிலும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த பொருளாக பார்க்கப்படுகிறது. பச்சைக் கற்பூரம் காம்ஃபர்லால் என்ற தாவரத்திலிருந்து பெறப்படுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும். இதே தாவரத்திலிருந்து தான் லவங்கப்பட்டையும் உருவாகிறது. உணவு ஆன்மீகம் ஆகியவை தவிர்த்து பச்சை கற்பூரம் அழகு சாதன பொருளாகவும், மருத்துவப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. மகாலட்சுமியின் (Goddess Mahalakshmi) அனுக்கிரகம் பெற்ற பொருளாக பச்சைக் கற்பூரம் திகழும் நிகழும் நிலையில் அதனை பூஜை அறையில் வைத்து வழிபடுவதால் எப்போதும் வீட்டில் மகிழ்ச்சி தங்கும் என நம்பப்படுகிறது.
அதேபோல் இதற்கு செல்வத்தை ஈர்க்கும் தன்மை அதிக அளவில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆகவே ஒரு மஞ்சள் துணியில் பச்சை கற்பூரத்தை முடிந்து வீட்டின் குபேர மூலையில் வைத்து வழிபட்டு வந்தால் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கையாகும். பச்சைக் கற்பூரம் வீட்டில் இருப்பதால் அங்கு நிலவும் எதிர்மறை சக்திகள் விலகி செல்லும் என்பது ஐதீகமாக சொல்லப்படுகிறது. தொழில் மற்றும் செல்வம் பெருக அதிக பணம் புழங்கும் பணப்பெட்டி, பீரோ உள்ளிட்ட இடங்களில் இதனை வைக்கலாம்.
ஒரு நல்ல மணம் மனதின் புத்துணர்ச்சியை நிர்ணயிக்கும் என சொல்வார்கள். பச்சைக் கற்பூரம் வீட்டில் வைப்பதால் ஜோதிடத்தில் உள்ள ஒரு கிரகத்தின் தூண்டுதல் நம் உடலில் ஏற்படுகிறது என சொல்லப்படுகிறது. அதன்படி புதன் கிரகம் பச்சை கற்பூரம் மூலம் நம்முடைய வாழ்வில் மிகப்பெரிய அளவில் தொடர்புடையதாக மாறுகிறது.
பாசிட்டிவான எண்ணங்கள் தோன்ற என்ன செய்யலாம்?
பொதுவாக வீட்டில் உள்ள உறுப்பினர்கள் இடையே சண்டை சச்சரவுகள் ஏற்பட்டால் ஏதோ திருஷ்டி, எதிர்மறை சக்தி வந்துவிட்டதாக நினைப்போம். மேலும் தூக்கமின்மை, மன அமைதி இல்லாமை, என எதுவாக இருந்தாலும் ஒரு செம்பு நிறைய தண்ணீர் நிரப்பி அதில் இரண்டு அல்லது மூன்று பச்சை கற்பூர துண்டுகளை போட வேண்டும். பின்னர் அதில் ஒரு டீஸ்பூன் மஞ்சள் பொடியை போட்டு அந்த தண்ணீரை வெட்ட வெளியில் ஓரிடத்தில் வைத்து விட வேண்டும்.
இந்த தண்ணீரை காலையில் வீட்டு வாசலில் தெளிக்கும் நீரோடு கலந்து தெளித்து விட வேண்டும். இப்படியாக 48 நாட்கள் தொடர்ந்து செய்தால் வீட்டில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் விலகி பாசிட்டிவ் எண்ணங்கள் தோன்றும் என்பது நம்பிக்கை ஆகும். பச்சைக் கற்பூரத்தை பொடியாக மாற்றி அதனை விபூதி அல்லது குங்குமத்துடன் கலந்து நெற்றியில் திலகமாக வைத்துக் கொண்டால் செய்யும் எந்த ஒரு செயலிலும் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகமாக பார்க்கப்படுகிறது. பச்சைக் கற்பூரம் மன அழுத்தத்தை குறைக்கும் என நம்பப்படுகிறது.
(இணையத்தில் உலாவும் தகவல்கள் அடிப்படையில் இந்த செய்தி கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றின் உண்மைகளின் துல்லியத்திற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)