Deepam: நன்மைகள் அளிக்கும் தீப வழிபாடு.. கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
தீபமேற்றி வழிபடுவது ஆன்மிகத்தைப் பொறுத்தவரை மிக சிறந்த நேர்மறையான எண்ணமாக பார்க்கப்படுகிறது. ஐந்து முக விளக்கின் சிறப்பு, தீபம் ஏற்றுவதற்கான சரியான முறைகள் ஆகியவை குறித்து இந்த கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது. அதேபோல் கோயில்களில் நடக்கும் திருவிளக்கு பூஜைகளிலும் பங்கேற்று அதற்கான பலனைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக சில விஷயங்களை நாம் பார்க்கும்போதே பாசிட்டிவ் உணர்வுகள் (Positive Vibes) நம் மனதில் தோன்றிவிடும். இது ஆன்மிக (Spiritual) ரீதியாக பல பரிமாணங்களில் நம்மை உணர வைக்கும். உதாரணமாக சிலைகள், கோயில் கோபுரம், கடவுளின் பாடல்கள், பூக்கள், புகைப்படங்கள் என ஏதோ ஒன்று சட்டென நமக்குள் ஒருவித மாற்றத்தை உண்டாக்கி விடும். அவற்றில் மிக முக்கியமானது தீபமேற்றும் வைபவம். வீடு, கோயில் என எங்கிருந்தாலும் கடவுள் வழிபாட்டின் தொடக்கம் என்பது தீபத்தில் இருந்து தான் நடைபெறுகிறது. வாழ்க்கையில் ஏற்படும் இருளை அகற்றி ஒளியை உண்டாக்கும் அடிப்படை தத்துவத்தில் தீபமேற்றுதல் செய்யப்படுகிறது. அதேசமயம் இது எதிர்மறை சக்திகளை விரட்டுவதாகவும் நம்பப்படுகிறது. இத்தகைய விளக்கேற்றுதல் நடைமுறையில் பின்பற்றப்படும் சிறப்புகள் பற்றி காணலாம்.
பொதுவாக வீட்டில் இடத்திற்கு ஏற்றவாறு விதவிதமான விளக்குகள் பயன்படுத்தப்பட்டாலும் பூஜையறையில் இருக்கக்கூடிய பிரதானமாக ஐந்து முகங்கள் கொண்ட விளக்கு தான் இருக்கும். இவை அன்பு, நிதானம், மன உறுதி, சமயோசிதம், சகிப்புத்தன்மை ஆகியவை ஒருவருக்கு மிக முக்கியம் என்பதை உணர்த்தும் வகையில் அமைவதாக உள்ளது. அதனால்தான் புது பெண்ணாய் வீட்டிற்கு வரும் மணப்பெண்ணை வீட்டினுள் வலது காலை எடுத்து உள்ளே வைத்தவுடன் நேராக சென்று விளக்கேற்றி வழிபாடு செய்ய சொல்கிறார்கள்.
பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்
மேலும் நீங்கள் எக்காரணம் கொண்டும் தரையில் விளக்கை வைத்து தீபம் ஏற்றக்கூடாது. மாறாக மரப்பலகையில் கோலமிட்டு அதன் மேல் விளக்கு இருக்க வேண்டும். அதுபோல் விளக்கிற்கு பூ வைப்பது என்பது மிகவும் நேர்மறையான சம்பவமாக பார்க்கப்படுகிறது. தீபலட்சுமியாக கருதப்படும் திருவிளக்குகளை சரியாக பராமரித்தல் என்பது அவசியமாகும்.
தற்காலத்தில் பயன்படுத்தப்படும் எண்ணெய் போன்றவை காரணமாக அவற்றில் பச்சை நிற கரைகள் அதிகமாக சேருகிறது. எனவே வாரம் ஒரு முறை விளக்குகளை நன்றாக சுத்தம் செய்து அவற்றில் சந்தனம், குங்குமம் வைத்து விளக்கேற்ற வேண்டும். எதற்காகவும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விளக்குகளை சுத்தம் செய்ய வேண்டாம். எந்த ஒரு பண்டிகை நாட்கள் வந்தாலும் அதற்கு முந்தைய நாள் அதனை சுத்தம் செய்து வைத்திருக்க வேண்டும்.
என்னென்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா?
இத்தகைய விளக்கில் தீபம் ஏற்ற உகந்தது பஞ்சு திரி தான். அதேசமயம் எருக்கம் பட்டை திரியால் விளக்கேற்றினால் செல்வம் சேரும் என்றும், மறைத்தண்டு திரியால் விளக்கேற்றினால கர்ம வினைகள் அகலும் எனவும் நம்பப்படுகிறது.
எல்லா நாட்களிலும் பஞ்சமுக விளக்கில் ஐந்து பக்கமும் விளக்கேற்ற வேண்டுமா என்றால் அது தேவையில்லை. ஆனால் ஒவ்வொரு முகத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது. ஒருமுகம் ஏற்றினால் ஓரளவு வளம் கிடைக்கும். அதே போல் இரண்டு ஏற்றினால் குடும்ப ஒற்றுமை தழைத்தோங்கும். மூன்று முகம் ஏற்றினால் குழந்தை பேறு கிடைக்கும். நான்கு முகம் ஏற்றினால் செல்வ வளம் பெருகும். ஐந்து முகம் ஏற்றினால் சகல சௌபாக்கியமும் இருக்கும் என நம்பப்படுகிறது.
திருவிளக்கு பூஜையின் நன்மைகள்
வீட்டில் ஒரு முகமாக தீபமேற்றினால் விளக்கில் எரியும் தீபம் எப்போதும் கிழக்கு திசை நோக்கியே இருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் கடன் தொல்லை நீங்க மேற்கு திசையும், செல்வ வளம் பெருக வடக்கு திசையும் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது ஆனால் எக்காரணத்தில் கொண்டும் தெற்கு நோக்கி தீபம் ஏற்றக்கூடாது.
மேலும் கோயில்களில் நடைபெறும் திருவிளக்கு பூஜைகளில் கலந்து கொள்வது மிகவும் புண்ணியமாக பார்க்கப்படுகிறது. பலர் ஒரே இடத்தில் கூடி முழு மனதுடன் திருவிளக்கு பூஜையில் ஈடுபடுவது யாகம் செய்வதற்கு ஈடான பலனை தருகிறது. கூட்டுப் பிரார்த்தனை இருந்தால் இறைவன் அருளை எளிதாக பெற முடியும் என சொல்லப்படுவதால் நீங்களும் இதுபோன்ற நிகழ்வுகள் பங்கேற்று மனமகிழ்வைப் பெறுங்கள்.
(இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்கள் யாவும் ஆன்மிக நம்பிக்கையின்படி இணையத்தில் வரும் தகவல்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)