Panguni Uthiram: 2025 பங்குனி உத்திரம் எப்போது? .. அந்நாளின் முக்கியத்துவம் இதோ!
பங்குனி மாதத்தில் வரும் பங்குனி உத்திரம் திருநாள் முருகன், குலதெய்வ வழிபாடு மற்றும் பல தெய்வத் திருமணங்களுடன் தொடர்புடைய முக்கியமான நாளாக பார்க்கப்படுகிறது. இந்நாளில் விரதம் இருந்து குலதெய்வம் அல்லது முருகனை வழிபடுவது புண்ணியம் என நம்பப்படுகிறது. இதுதொடர்பாக தகவல்களைக் காணலாம்,

பங்குனி உத்திரம்
தமிழ் மாதங்களில் கடைசி மாதம் பங்குனியாகும். இந்த மாதம் பிறந்தாலே நம் அனைவருக்கும் நினைவுக்கு வரும் மிக முக்கிய விஷேச தினம் “பங்குனி உத்திரம்” (Panguni Uthiram 2025). பெரும்பாலான மங்கள காரியங்கள் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி பங்குனி மாதத்தில் தான் நடக்கிறது. அதிலும் உத்திரம் வரும் நாள் மிகவும் சிறப்பானது. பொதுவாக பங்குனி உத்திரம் நாளானது முருகப்பெருமானுக்குரிய (Lord Murugan) முக்கிய விசேஷ தினமாக பலராலும் பார்க்கப்படுகிறது. ஆனால் தென் மாவட்டங்களில் பங்குனி உத்திரம் என்றால் அன்றைய நாள் அனைவரும் தங்கள் குலதெய்வ கோயிலுக்கு (Family Deity) சென்று பொங்கல் வைத்து வழிபாடு செய்து விட்டு வருவார்கள். இன்றைய நாளில் குலதெய்வத்தை வழிபாடு செய்தால் நம்முடைய குலம் செழித்தோங்கும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா பற்றி நாம் காணலாம்.
இத்தகைய நாளில் தான் சிவனுக்கும் பார்வதிக்கும், மீனாட்சிக்கும் சுந்தரேஸ்வரருக்கும், முருகன் – தெய்வானை, ராமர் – சீதா ஆகியோருக்கு திருமணம் நடந்ததாக சொல்லப்படுகிறது. அதேசமயம் ஆண்டாள் இந்நாளில் தான் ஸ்ரீரங்கம் ரங்கநாதருடன் ஐக்கியமானதாக சொல்லப்படுகிறது. எனவே இந்த நாள் இந்து மதத்தை பின்பற்றுபவர்களிடையே மிக முக்கியமான நாளாக பார்க்கப்படுகிறது.
2025 ஆம் ஆண்டு பங்குனி உத்திரம்
பஞ்சாங்கத்தின் படி 2025 ஆம் ஆண்டு பங்குனி உத்திரம் திருநாள் வரும் ஏப்ரல் பதினொன்றாம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. அதற்கு முந்தைய நாள் 2020 ஏப்ரல் 10-ம் தேதி பிற்பகல் 2.07 மணிக்கு தொடங்கி ஏப்ரல் 11ம் தேதி மாலை 4.11 மணி வரை மட்டுமே உத்திர நட்சத்திரம் உள்ளது. அதேசமயம் பௌர்ணமி திதி ஏப்ரல் 12ஆம் தேதி காலை 4.13 மணிக்கு தொடங்கி ஏப்ரல் 13-ஆம் தேதி காலை 6.03 மணி வரை இருக்கிறது. ஆனால் பங்குனி உத்திரம் என்பது நட்சத்திரத்தின் அடிப்படையில் கொண்டாடப்படும் முக்கிய விரத நாள் என்பதால் உத்திர நட்சத்திரம் வரும் நாளை பங்குனி உத்திரமாக கடைபிடிக்க வேண்டும். அதன்படி 2025, ஏப்ரல் 11 அன்று பங்குனி உத்திரம் கொண்டாடப்பட உள்ளது
இத்தகைய பங்குனி உத்திரத்தில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் மிகுந்த புண்ணியமாக பார்க்கப்படுகிறது. பங்குனி உத்திரம் விரதத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் இருக்கலாம். முருகன், நம்முடைய குலதெய்வம் என யாரை நினைத்து வேண்டுமானாலும் விரதம் இருக்கலாம்.
பழனியில் பங்குனி உத்திரம் திருநாள்
இந்நாளில் அருகில் உள்ள நீர் நிலைகளில் நீராடி கோயில்களுக்கு சென்று வழிபட்டால் மிகுந்த பலன்கள் கிடைக்கும் என நம்பப்படுகிறது. பங்குனி உத்திர நாளில் பல கடவுள்களுக்கும் திருமணம் நடைபெற்றுள்ள நிலையில் இந்த மாதமே மிகவும் சிறப்பான மாதமாக பார்க்கப்படுகிறது. முருகனுக்கு உரிய பண்டிகை என்பதால் அவரின் மூன்றாம் படை வீடான பழனியில் பங்குனி உத்திரம் திருநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இத்தகைய நாளில் வீட்டில் விரதம் இருந்து வழிபடலாம். அதிகாலையில் எழுந்து குளித்து பூஜையறையில் நைவேத்தியம் வைத்து இறை வழிபாடு செய்யலாம்.
காலை, மதியம் இரு வேளைகள் சாப்பிடாமல் விரதம் மேற்கொண்டு மாலையில் மீண்டும் வழிபாடு செய்து நைவேத்தியமாக வைக்கப்பட்ட பால், பாயாசம், பழம் உள்ளிட்டவற்றை உண்டு விரதம் முடிக்கலாம்.
(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக தகவலின் அடிப்படையில் மட்டுமே எழுதப்பட்டது. இதற்கு டிவி9 பொறுப்பேற்காது. இதன் உண்மைகளின் துல்லியத்திற்கு அறிவியல் ஆதாரம் இல்லை)