வீட்டில் கண்ணாடி பொருட்கள் உடைவது நல்லதா? கெட்டதா? – சாஸ்திரம் சொல்லும் பதில்!
பொதுவாக உடைந்த கண்ணாடியில் முகம் பார்க்கவே கூடாது. இது அசுபமாக கருதப்படுகிறது. அதேபோல் வீட்டில் கண்ணாடிப் பொருட்கள் உடைவது எதிர்மறை சகுணமாகக் கருதப்படுகிறது. இது நிதி இழப்பு அல்லது குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் என சொல்லப்படுகிறது. எனவே உடைந்த கண்ணாடிகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும்.

பொதுவாகவே வீட்டில் எதிர்மறையான சம்பவங்கள் (Negative Incidents) நடக்கப்போகிறதோ, அல்லது வாழ்க்கையில் நெகட்டிவான நிகழ்வுகள் நடந்தாலோ அதனை நாம் சில சகுணங்கள் மூலம் அறியலாம் என சாஸ்திரங்கள் சொல்கிறது. சில நேரங்களில் நாமும் அதை உணர்ந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அந்த வகையில் கண்ணாடி பொருட்களை உடைப்பது எதிர்மறையான சம்பவமாக பார்க்கப்படுகிறது. எந்தவொரு காரியத்தையும் தொடங்கும்போது சகுனம் பார்த்து செய்ய வேண்டும் என முன்னோர்கள் தெரிவித்திருக்கிறார்கள். நம்முடைய வாழ்க்கையில் கண்ணாடி சார்ந்த பொருட்களை (Glass Products) ஏராளமாக பயன்படுத்துகிறோம். முகம் பார்ப்பது தொடங்கி சமையலறை பொருட்கள், வாட்ச், கண் கண்ணாடி, செல்போன் திரை என பலவற்றிலும் வெவ்வேறு வகைகளில் பயன்படுகிறது. இவை அனைத்தும் சாதாரணமாக உடைந்துப் போக கூடியது என்றாலும் அதில் கவனமாக இருக்க வேண்டும் என சொல்லப்படுகிறது.
காரணம் அடிக்கடி நம் வீட்டில் கண்ணாடி பொருட்கள் உடைந்தால் எதிர்மறையான சம்பவங்கள், எண்ணங்கள் நிகழ்வதாக கருத்தில் கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் முகம் பார்க்கும் கண்ணாடி, பீரோவில் இருக்கும் கண்ணாடி, கண்ணாடி பிரேம் செய்யப்பட்ட புகைப்படங்கள் அடிக்கடி உடைந்தால் கவனமாக இருக்க வேண்டும். பொதுவாக சாஸ்திரத்தில் கண்ணாடியானது எட்டு வகையான மங்கள பொருட்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
வீட்டு நுழைவு வாயிலில் கண்ணாடி
அதனால் தான் ஒவ்வொரு விசேஷ வீட்டிலும் கண்ணாடி இடம் பெறுகிறது. வீட்டு நுழைவு வாயிலில் பெரும்பாலான இடங்களில் கண்ணாடி வைத்திருப்பதைப் பார்த்திருக்கலாம். வீட்டிற்கு யாரேனும் எதிர்மறை எண்ணங்களுடன் வருகிறார்கள் என்றால் அதில் தங்களைத் தானே பார்க்கும்போது அந்த எண்ணங்கள் விலகியோடும் என நம்பப்படுகிறது.
கண்ணாடி உடைவது ஒரு சாதாரவ்ண நிகழ்வு தான். இந்த உலகத்தில் இருக்கும் உயிருள்ள, உயிரற்ற அனைத்து பொருட்களுக்கும் காலம் என்ற ஒன்று உள்ளது. அது முடிந்துவிட்டால் எல்லாம் காணாமல் போய்விடும். எனவே கண்ணாடி பொருட்கள் உடைந்தால் அதனை உடனடியாக வீட்டில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். சிலர் கீறல் விழுந்த பொருட்களை பத்திரமாக எடுத்து வைத்திருப்பார்கள். இதனால் எதிர்மறை எண்ணங்கள் வீட்டில் பரவும் என சொல்லப்படுகிறது.
நிதி இழப்பை உண்டாக்ககூடும்
வீட்டில் கண்ணாடி சம்பந்தப்பட்ட பொருட்கள் உடைவது நிதி இழப்பை உண்டாக்ககூடும் என சொல்லப்படுகிறது. அதேசமயம் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் பிரச்னை உண்டாகலாம் என நம்பப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் கண்ணாடி பொருட்கள் தொழில் செய்யும் இடத்தில் அடிக்கடி உடைந்தால் வியாபாரத்தில் சறுக்கல் உண்டாக வாய்ப்புள்ளது. சம்பந்தமே இல்லாமல் வீட்டில் இருக்கும் ஜன்னல் கதவுகளில் உள்ள கண்ணாடிகள் விரிசல் விட்டாலோ அல்லது உடைந்தாலோ வாழ்க்கையில் எதிர்மறையான சம்பவங்கள் நடக்கப்போகிறது என கூறப்படுகிறது.
வீட்டில் நீள்வட்டமான பெரிய கண்ணாடிகளை பயன்படுத்த வேண்டாம் என சாஸ்திரங்கள் தெரிவிக்கிறது. எப்போதும் சதுரம் அல்லது செவ்வக வடிவிலான கண்ணாடியை பயன்படுத்துவதால் பாசிட்டிவ் எண்ணங்கள் ஏற்படும் என சொல்லப்படுகிறது.
(இந்த கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள தகவல்கள் ஆன்மிக நம்பிக்கையின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றின் உண்மைகளின் துல்லியத்திற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)