சபரிமலையில் ஐயப்பன் உருவம் பொறித்த தங்க டாலர்.. பெறுவது எப்படி?
சபரிமலை ஐயப்பன் கோயில் தங்க டாலரை அறிமுகம் செய்துள்ளது. ஐயப்பன் உருவம் பொறிக்கப்பட்ட இந்த டாலர் 2, 4, மற்றும் 8 கிராம் எடைகளில் கிடைக்கிறது. இதனை ஆன்லைனில் முன்பதிவு செய்து, சன்னிதானத்தில் பெற்றுக்கொள்ளலாம். கடந்த இரண்டு நாட்களில் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

கேரளா, ஏப்ரல் 15: சபரிமலை ஐயப்பன் கோயிலில் (Sabarimala Ayyappan Temple) பக்தர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக ஐயப்பன் உருவம் பொறித்த தங்க டாலர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் (Kerala) பத்தினம் திட்டா மாவட்டத்தில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு வயது வித்தியாசமில்லாமல் ஆண்கள் வந்து செல்கின்றனர். அதேசமயம் முன்பெல்லாம் 10 வயதுக்குட்பட்ட சிறுமிகள், 50 வயதுக்கு மேற்பட்ட முதிய பெண்மணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர். ஆனால் உச்சநீதிமன்றம் பெண்கள் சபரிமலைக்கு செல்லலாம் என தீர்ப்பு வழங்கினாலும் காலம் காலமாக கடைபிடிக்கப்படும் மரபை பெண்கள் பின்பற்றி வருகின்றனர். சபரிமலையில் கார்த்திகை மற்றும் மார்கழி மாதம் சீசன் காலமாகும். இந்த காலக்கட்டத்தில் 48 நாட்கள் நடை திறக்கப்பட்டிருக்கும்.
அதேசமயம் மற்ற தமிழ் மாதங்களில் முதல் தேதி தொடங்கி 5 ஆம் நாள் வரை நடை திறக்கப்பட்டிருக்கும். மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு காலங்களில் சபரிமலைக்கு வர முடியாதவர்கள் இந்த நாட்களைப் பயன்படுத்தி சாமி தரிசனம் செய்வார்கள். ஒரு மண்டலம் விரதம் இருந்து இருமுடி சுமந்து ஐயனை காண்கையில் உண்மையில் உடல், மனதில் உள்ள சுமைகள் அனைத்தும் காணாமல் போகும்.
சபரிமலையில் தொடர் திருவிழா
இதனிடையே ஸ்ரீ தர்ம சாஸ்தா பிறந்த தினமாக கருதப்படும் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 2025 ஏப்ரல் 1ம் தேதி திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெற்ற திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பங்குனி உத்திரத் திருவிழாவான ஏப்ரல் 11ம் தேதி பம்பை நதியில் ஐயப்பனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதற்கிடையில் பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக சபரிமலையில் நடைபெற்ற முடிந்த நிலையில் சித்திரை விஷூ தினத்தை முன்னிட்டு 25 ஏப்ரல் 14ஆம் தேதி காலை 4 மணிக்கு கனி காணும் நிகழ்ச்சியானது நடைபெற்றது.
தங்க டாலர் அறிமுகம்
இந்த நிகழ்வுக்கு பின்னர் ஐயப்ப சுவாமியின் உருவம் பறித்த தங்க டாலர் விற்பனை தொடக்க விழா நடைபெற்றது. சபரிமலையில் உள்ள கோயில் கொடிமரம் அருகே இதற்கான விற்பனை நிகழ்ச்சி தொடங்கியது. ஆந்திராவைச் சேர்ந்த மணிரத்தினம் என்பவர் முதல் டாலரை வாங்கினார். இந்நிகழ்ச்சியில் தந்திரி கண்டவரு ராஜீவரர், திருவாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரஷாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்டவர்களில் மணிரத்னம் தேர்வு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.
முன்பதிவு செய்து பெறுவது எப்படி?
சபரிமலையில் விற்பனைக்கு வந்துள்ள ஐயப்பன் உருவம் பொறித்த தங்க டாலர் மூலம் பக்தர்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை https://sabarimalaonline.org/#/login என்ற இணையதளத்தின் வாயிலாக முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். அவ்வாறு முன்பதிவு செய்பவர்கள் சபரிமலை சன்னிதானத்திற்கு வருகை தந்து அங்கிருக்கும் நிர்வாக அலுவலகத்திடம் அந்த டாலரை வாங்கிக் கொள்ள வேண்டும்.
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் இதனை முன்பதிவு செய்துள்ளதாக திருவாங்கூர் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது மேலும் இந்த தங்க டாலர்கள் 2,4,மற்றும் 8கிராம் அளவுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இரண்டு கிராம் டாலர் ரூ.19,300, 4 கிராம் 38,600, 8 கிராம் ரூ.77,200 க்கு விற்பனை செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.