Pradosham: வெள்ளிக்கிழமை பிரதோஷம்.. சிவனை வழிபட்டால் இவ்வளவு சிறப்பா?
வெள்ளிக்கிழமை பிரதோஷம் வருவது சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த சுக்கிர வார பிரதோஷத்தில் சிவபெருமானையும் நந்தியையும் வழிபடுவதால் கடன் பிரச்சினைகள் குறையும், தோஷங்கள் நீங்கும், செல்வ வளம் பெருகும் என நம்பப்படுகிறது. வில்வ இலை, செவ்வரளி மலர் அர்ச்சனை, நெய் தீபம் ஏற்றல் போன்றவை சிறப்பு வழிபாடுகளாகும்.

வெள்ளிக்கிழமை பிரதோஷ பலன்கள்
பொதுவாக இந்து மதத்தில் ஏராளமான கடவுள்கள் பல்வேறு அவதாரங்களில் உள்ளனர். இத்தகைய கடவுள்களுக்கென விசேஷ நாட்களும் உள்ளது. அந்த வகையில் முழுமுதற் கடவுளாக அறியப்படும் சிவபெருமானுக்கு (Lord Shiva) உகந்த நாளாக பிரதோஷம் (Pradhosam) பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரியோதிசி திதிகளில் பிரதோஷமானது கொண்டாடப்படுகிறது. பிரதோஷ காலத்தில் சிவபெருமானை வழிபட்டால் மிகவும் விசேஷமாக பார்க்கப்படுகிறது, மனதிற்கு அமைதி கிடைக்கும் எனவும் வாழ்க்கையில் இன்னல்கள் தீர்ந்து பல நன்மைகள் பெறலாம் எனவும் சொல்லப்படுகிறது. இத்தகைய பிரதோஷம் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கிழமையில் வரும். அந்த வகையில் வெள்ளிக்கிழமையில் பிரதோஷம் வந்தால் என்ன செய்யலாம் என்பது பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.
2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிரதோஷம் ஆனது வருகிறது. பிரதோஷ காலம் என்பது மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை கருதப்படுகிறது. இந்த காலகட்டத்தில் பல்வேறு கோயில்களிலும் விசேஷ வழிபாடானது நடைபெறுகிறது.
கோயில்களில் பிரதோஷ வழிபாடு
பொதுவாக பிரதோஷ காலங்களில் சிவன் கோயில்களில் 16 வகை அபிஷேகங்களும் சிறப்பு பூஜைகளும் நடைபெறுவது வழக்கம். மற்ற நாட்களில் சிவலிங்கத்திற்கு நடைபெறும் பூஜைகளும் அபிஷேகங்களும் பிரதோஷ நாளில் மட்டும் நந்திக்கும் சேர்த்து நடைபெறுவது சிறப்பான ஒன்றாகும். இந்தப் பிரதோஷத்திற்கு பால், தயிர், தேன், அரிசி மாவு, பஞ்சாமிர்தம், திரவிய பொடி, விபூதி என நம்மால் முடிந்ததை வாங்கி கொடுத்து சிவபெருமானின் ஆசியும், வாழ்க்கையில் வளமும் பெறலாம் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமை பிரதோஷம்
வெள்ளிக்கிழமையில் பிரதோஷம் வருவது சுக்கிர வாரம் என சொல்லப்படுகிறது. இந்த நாளில் சிவபெருமானை நாம் தரிசனம் செய்தால் கடன் பிரச்சனையில் ஒரு பாதி விரைந்து தீரும் என நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் உங்களுடைய ஜாதகத்தில் எந்த விதமான தோஷம் இருந்தாலும் பிரதோஷ நாளில் வழிபட்டால் அவை நீங்கும் என சொல்லப்படுகிறது.
சிவபெருமானை மட்டும் வணங்காமல் அவருக்குரிய வாகனமாக அறியப்படும் நந்தி தேவரையும் சேர்த்து வழிபடும்போது வாழ்க்கையில் செல்வ வளம் பெருகும் என ஐதீகமாக பார்க்கப்படுகிறது. இந்நாளில் நந்திப் பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் வாழ்க்கையில் பல பலன்களை பெறலாம் என கருதப்படுகிறது.
வெள்ளிக்கிழமை என்பது சுக்கிர பகவானின் ஆதிக்கம் நிறைந்த நாள் என்பதால் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டால் சுக்கிர யோகம் கிடைக்கலாம் என பக்தர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
இந்நாளில் விரதம் இருந்து வழிபட்டால் கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும் எனவும் வீட்டில் மகிழ்ச்சி நிலவும் எனவும் சொல்லப்படுகிறது. அது மட்டுமல்லாமல் குடும்ப உறுப்பினர்கள் இடையே இருந்த பகை நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும் என்றும், வீட்டில் பொருள்களின் சேர்க்கை அதிகமாகும் எனவும் நம்பப்படுகிறது. இந்நாளில் சிவன் கோயிலுக்கு சென்று வில்வ இலைகளாலும், செவ்வரளி மலர்களாலும் அர்ச்சனை செய்தால் மிகுந்த பாக்கியம் என கருதப்படுகிறது.
(இணையத்தில் பதிவிடப்படும் ஆன்மிக தகவல்கள் அடிப்படையில் இந்த செய்தியானது கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)