Chitra Pournami: சித்ரா பௌர்ணமி கிரிவலம்.. திருவண்ணாமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு

திருவண்ணாமலை சித்திரைப் பௌர்ணமி விழாவை முன்னிட்டு கோயில் பகுதியில் போலியான நெய் தீபம் விற்பனை மற்றும் கிரிவலப் பாதையில் கற்பூரம் ஏற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக 20 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Chitra Pournami: சித்ரா பௌர்ணமி கிரிவலம்.. திருவண்ணாமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு

திருவண்ணாமலை கிரிவலம்

Published: 

22 Apr 2025 11:31 AM

திருவண்ணாமலை, ஏப்ரல் 22: சித்திரை மாத பௌர்ணமியை (Chitra Pournami) முன்னிட்டு  திருவண்ணாமலையில் (Tiruvannamalai) லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் (Tharpagaraj IAS) அறிவித்துள்ளார். பொதுவாக பௌர்ணமி மாதத்தில் மலைப்பகுதியில் அமைந்துள்ள கோயில்களுக்கு பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். தமிழகத்தை பொறுத்தவரை திருவண்ணாமலை, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலை உள்ளிட்ட இடங்களுக்கு பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுவது வழக்கம். இதனை பின்பற்றுவோர் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாள் வந்தாலும் சித்திரை மாத வரும் பௌர்ணமி மிகவும் பிரசித்தி பெற்றது. இது சித்ரா பௌர்ணமி என அழைக்கப்படுகிறது.

இப்படியான திருவண்ணாமலைக்கு ஒவ்வொரு மாத பௌர்ணமி தினத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து கிரிவலம் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் 2025 ஆம் ஆண்டு சித்திரை மாத பௌர்ணமி திதி வரும் மே 11ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. வழக்கம்போல இம்முறையும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதால் இதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அதனை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் இன்று (ஏப்ரல் 22, 2025) நேரில் ஆய்வு செய்தார். மேலும் கிரிவலப் பாதையில் பக்தர்களுக்காக செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.

விஐபி தரிசனம் ரத்து.. கற்பூரம் ஏற்ற தடை

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் தர்ப்பகராஜ் சித்ரா பௌர்ணமி அன்று திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கடந்த காலங்களைப் போல இந்தாண்டும் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது என தெரிவித்தார் . அது மட்டுமல்லாமல் கோயில் பகுதியில் போலியான நெய் தீபம் விற்பனை செய்யவும், கிரிவலப் பாதையில் கற்பூரம் ஏற்றவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்..

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு 20 இடங்களில் 9 சாலைகளை இணைக்கும் வகையில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பக்தர்கள் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலைப் பின்பற்றி விழாவை சிறப்பாக கொண்டாடுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

பௌர்ணமி கிரிவலம்

திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாத பௌர்ணமியிலும் முதல் நாள் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6  மணி வரை பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். கிரிவலம் ஆன்மீக ரீதியாக பல நன்மைகளை அளிக்கும் என சொல்லப்படுவதால் வயது வித்தியாசம் இல்லாமல் சிறுவர் முதல் முதியவர்கள் வரை வருகை தருகின்றனர். இதனால் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தில் திருவண்ணாமலை களைகட்டி விடும். திருவண்ணாமலை பஞ்சபூதங்களில் அக்னி தலமாக திகழும் நிலையில் இங்கு கோயில் கொண்டிருக்கும் அருணாச்சலேஸ்வரரை வழிபடும் பொருட்டு கோயிலின் பின்புறம் உள்ள 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையை இலட்சக்கான பக்தர்கள் வலம் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.