Chithirai Amavasya: சித்திரை அமாவாசை எப்போது? – இதெல்லாம் செய்ய மறக்காதீங்க!

சித்திரை அமாவாசை முன்னோர் வழிபாட்டிற்கு மிகவும் முக்கியமான நாளாக பார்க்கப்படுகிறது. இந்நாளில் விரதம் இருப்பது, தானம் செய்வது ஆகியவை புண்ணியம் தரும் என சொல்லப்படுகிறது. அதேபோல சூரியன், நவகிரக வழிபாடு செய்வதும் நன்மை பயக்கும் என நம்பப்படுகிறது. ஆடி, தை, புரட்டாசி அமாவாசைகளைப் போலவே சித்திரை அமாவாசையும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

Chithirai Amavasya: சித்திரை அமாவாசை எப்போது? - இதெல்லாம் செய்ய மறக்காதீங்க!

சித்திரை அமாவாசை

Updated On: 

23 Apr 2025 13:22 PM

பொதுவாக இந்து மதத்தில் ஒவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அந்த வகையில் அமாவாசை (Amavasya) என்பது முன்னோர்களை வழிபடுவதற்கான நாளாக கருதப்படுகிறது. வருடம் முழுக்க ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதியில் அமாவாசை வந்தாலும் ஆடி, தை மற்றும் புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அதேசமயம் அமாவாசை நாளில் விரதம் இருப்பது முன்னோர்களின் ஆசிகளை பரிபூரணமாக பெற உதவும் என சொல்லப்படுகிறது. மற்ற நாட்களில் இல்லாவிட்டாலும் மேலே குறிப்பிடப்பட்ட 3 அமாவாசைகளை தவறாமல் முன்னோர் வழிபாட்டுக்காக கடைபிடிக்க வேண்டும் என சாஸ்திரங்கள் சொல்கிறது. இப்படியான நிலையில் சித்திரை மாதம் அமாவாசை (Chithirai Amavasya) எப்போது வருகிறது?, அதன் விரத முறைகள் என்னென்ன என்பது பற்றி காணலாம்.

பொதுவாக தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரை மாதத்தில் வரும் ஒவ்வொரு நாளும் விசேஷமானது என சொல்வார்கள். அந்த வகையில் இந்த மாதம் வரும் அமாவாசை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு சித்திரை மாத அமாவாசை வரும் ஏப்ரல் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கடைபிடிக்கப்படுகிறது.

பொதுவாக மாதம் தோறும் வரும் அமாவாசை நாட்களில் பலரும் முன்னோர் வழிபாட்டில் ஈடுபடுவார்கள். அந்த வகையில் வழிபடுபவர்களுக்கு வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு தடையும் முன்னோர்களின் ஆசியால் விலகி நன்மை உண்டாகும் என நம்பப்படுகிறது. அதே சமயம் வீட்டிலிருக்கும் வறுமை நிலை, நீண்ட நாளாக உடல்நல பாதிப்பால் அவதி, திருமண தடை, தொழிலில் போட்டி உள்ளிட்ட பல பிரச்சினைகள் விலகும் என நம்பப்படுகிறது.

அதே சமயம் அமாவாசை தினத்தில் முன்னோர் வழிபாட்டில் ஈடுபட்டு உணவு, உடை, பணம் என ஏதேனும் தானம் செய்தால் மிகுந்த புண்ணியமாக பார்க்கப்படுகிறது. அவ்வாறு செய்வது இரண்டு மடங்கு பலன்களைத் தரும் என சொல்லப்படுகிறது. இந்த சித்திரை மாதம் வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் குடை, செருப்பு, குளிர்ச்சியான நீராகாரம் என எதுவும் வாங்கி கொடுத்து ஏழைகளின் மனதை நிறைவு செய்யலாம்.

சூரிய பகவான் ஒவ்வொரு ராசியிலும் பிரவேசித்து மீண்டும் மேஷ ராசியில் பிரவேசிக்கும் காலம் சித்திரை மாதம் என்பதால் அந்த அமாவாசையில் விரதம் இருந்து சூரியனுக்கு நீர் படைத்து வழிபடலாம். இவ்வாறு செய்வதால் ஜாதகத்தில் சூரிய பகவானின் பலம் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. மேலும் இந்நாளில் நவகிரக வழிபாட்டில் ஈடுபட்டால் மனக்குழப்பங்கள் அகன்று சந்திரனின் பலம் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.

(இந்த கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஆன்மிக நம்பிக்கையின்படி எழுதப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)