Tamil New Year 2025: விசுவாவசு ஆண்டு சாதகமாக அமையுமா? – கன்னி ராசிக்கான பலன்கள்!
2025 ஆம் ஆண்டு விசுவாசு ஆண்டில் கன்னி ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமான ஒரு ஆண்டாக இருக்கும் என ஜோதிடம் கூறுகிறது. ராசிக்காரர்களின் நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். தொழில், குடும்பம், உறவுகள் அனைத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். ராகு கேது பெயர்ச்சி நன்மையைத் தரும் என கணிக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு (Tamil New Year) விசுவாவசு ஆண்டாக அழைக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் 12 ராசிக்காரர்களுக்கும் பல்வேறு விதமான மாற்றங்கள் நிகழப் போகிறது என ஜோதிடத்தில் கணிக்கப்பட்டுள்ளது. அப்படியாக கன்னி ராசிக்காரர்களுக்கு (Virgo) என்ன நடக்கும் என்பது பற்றி பார்க்கலாம். கன்னி ராசிக்காரர்கள் பொதுவாகவே விட்டுக் கொடுத்துச் செல்லும் மனப்பான்மை அதிகம் உடையவர்கள். எந்த நேரமும் எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை இவர்களுக்குள் ஓடிக் கொண்டே இருக்கும். இந்த தமிழ் புத்தாண்டு இந்த ராசிக்காரர்களுக்கு நினைத்ததெல்லாம் நடக்கும் வகையில் அமையும் என கணிக்கப்பட்டுள்ளது.
2025 மே 18ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடைபெற உள்ளது. இதனால் உங்களுக்கான சோதனை காலம் முடிந்து மிகுந்த நன்மைகள் தொடங்கக்கூடிய நேரம் பிறக்கும். சுறுசுறுப்பாக செயல்படும் நீங்கள் எடுக்கும் எந்த புதிய முயற்சியும் வெற்றி அடையும். வெளியூர் மற்றும் வெளி மாநில பயணங்களால் மனதிற்குள் குதூகலம் பிறக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு இல்வாழ்க்கையை சிறப்பாக கொண்டு செல்வீர்கள்.
நீண்ட நாள் திட்டம் நிறைவேறும்
நீண்ட நாட்களாக திட்டமிட்டு வரும் புனித தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு அமையும். குடும்பத்தினர், நண்பர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பிள்ளைகளுக்கு வெளிநாட்டில் வேலை, திருமண வரன் ஆகியவை அமைவதற்கான காலம் கனியும். இதுவரை தடைபட்டுக் கொண்டிருந்த பிரச்சனைகளில் தீர்வுகள் கிடைக்கும். அம்மா வழி சொந்தங்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி உறவு பலப்படும். அதே சமயம் தந்தை வழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும்.
குடும்பத்தில் உங்களுக்கான முக்கியத்துவம் அதிகரிக்கும் காலம் வந்துவிட்டது. அதனால் கவலைப்பட வேண்டாம். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். நீதிமன்ற வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களாக கைக்கு வர வேண்டிய பணம் வந்து சேரும். ஆபரணங்கள் வாங்கி மகிழுங்கள். அக்கம் பக்கத்தினருடன் இணக்கமாக செயல்பட்டு நல்லுறவை வளர்ப்பீர்கள்.
பெண்களுக்கான பலன்கள்
பெண்களுக்கு தமிழ் புத்தாண்டு சாதகம் மற்றும் பாதகமாக அமையும் என கணிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தில் நிகழும் நிகழ்வுகளை கண்டு கோபங்கள், வேதனைகள் ஏற்பட்டாலும் அவை சில காலம் தான் மகிழ்ச்சியான நேரம் வந்துவிட்டது, உடல்நலத்தில் கூடுதல் கவனம செலுத்தவும். கணவர் வழி சொந்தங்களிடம் சங்கடங்கள் நீங்கி பாசம் தழைக்கும். திருமண வயதில் உள்ள பெண்கள் மற்றும் உயர் படிப்பு படிக்க விரும்பும் மாணவியர்கள் பெற்றோரின் ஆலோசனையுடன் தெளிவான முடிவை எடுப்பீர்கள்.சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு அமையும். கெட்ட நண்பர்களின் சகவாசத்தை விட்டுவிட்டு படிப்பில் அக்கறை காட்டினால் வெற்றி கிடைக்கும்.
தொழில் துறை பலன்கள்
வியாபாரத்தை பொறுத்தவரை கொடுக்கல் வாங்கலில் சுமுகமான நிலை நிலவும் வரவேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். பத்தாம் இடத்தில் குரு வருவதால் வியாபாரத்தை விரிவு படுத்துகிறேன் என அளவுக்கு மீறி கடன் வாங்க வேண்டாம். இந்த காலகட்டத்தில் கூட்டுத் தொழில் தொடங்க முடிவு செய்தால் அதனை தள்ளி வைப்பது நல்லது. வாடிக்கையாளர்களிடம் சாதுரியமான பேச்சால் லாபம் பெறும். நீங்கள் வாஸ்துபடி தொழில் செய்யும் இடத்தை மாற்றக்கூடிய சூழல் உண்டாகலாம்.
பணியிடங்களில் மேலதிகாரிகளுடன் வாக்குவாதங்கள் வந்து போகும் நிலையில் வேலைகளில் முடிப்பதில் அலட்சியம் தேவையில்லை. அடிக்கடி விடுப்பு எடுப்பது, சக ஊழியர்களிடம் ஊழியர்களின் தனிப்பட்ட விஷயங்களில் கருத்து செல்வது என எதையும் செய்யாதீர்கள். வீண் பிரச்சனை உருவாக வாய்ப்பு உள்ளது. ஏதேனும் சொத்து பத்திரங்களில் கையெழுத்திடும் போது நன்கு படித்துவிட்டு செயல்படவும்.
இந்த தமிழ் புத்தாண்டு உங்களின் நெடுநாள் கனவை நினைவாக்கும் வகையில் அமையும் அதற்காக பழனி மலை முருகனை வழிபடுவதோடு சந்தர்ப்பம் கிடைத்தால் ஒரு முறை சென்று நேரில் வணங்கி வாருங்கள் உரிய பலன்கள் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
(இந்த தகவல்கள் ஜோதிட நம்பிக்கையின்படி கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் இவற்றில் உள்ள கருத்துகளின் துல்லியத்திற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)