Akshaya Tritiya: அட்சய திரிதியை நாளில் கல் உப்பு வாங்க மறக்காதீங்க!
அட்சய திருதியை, 2025 ஏப்ரல் 30 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் உப்பு வாங்குவது மங்களகரமானது என நம்பப்படுகிறது. உப்பு தானம் செய்வது துன்பங்களை நீக்கி, முன்னோர்களின் ஆசிர்வாதத்தைப் பெற உதவும். கல் உப்பு வாங்குவது லட்சுமி கடாட்சத்தை அளிக்கும் என ஐதீகம் உள்ளது.

இந்துக்கள் விசேஷ தினங்களில் வீட்டுக்கு தேவையான பொருட்கள் தொடங்கி ஆபரணங்கள் வரை வாங்கி அந்த நாளை சிறப்பிப்பார்கள். அந்த வகையில் அட்சய திரிதியை (Akshaya Tritiya) என்றால் கேட்கவா வேண்டும். இந்நாளில் நாம் என்ன வாங்கினாலும் தொட்டதெல்லாம் துலங்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத சுக்ல பக்ஷ காலம், அதாவது அமாவாசை (Amavasya) முடிந்த மூன்றாம் நாளில் அட்சய திருதியை விழா கொண்டாடப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு, அட்சய திருதியை ஏப்ரல் 30 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஜோதிட சாஸ்திரப்படி அட்சய திருதியை சுயம் சித்தி முஹூர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. ஏனென்றால் இந்த நாளில் எந்த சகுணமும் பார்க்காமல் நீங்கள் எதையும் செய்யலாம். அட்சய திருதியை அன்று பல பொருட்களை வாங்குவது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. அவற்றில் ஒன்று உப்பு. அட்சய திருதியை அன்று உப்பு ஏன் வாங்க வேண்டும் என்பது பற்றி நாம் காணலாம்.
இந்த நாளில் தான் பரசுராம ஜெயந்தியும் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் லட்சுமி தேவியை சிறப்பு வழிபாடுகளுடன் வணங்கக்கூடிய பாரம்பரியம் இந்து மக்களிடையே உள்ளது. இந்த நாளில் லட்சுமி தேவியை வழிபடுவது வாழ்க்கையில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பைத் தரும் என்று ஐதீகம் உள்ளது.
அட்சய திருதியை அன்று ஏன் உப்பு வாங்க வேண்டும்?
அட்சய திருதியை அன்று தங்கம் வாங்குவது வீட்டிற்கு நல்ல அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் தரும் என்று நம்பப்படுகிறது. அதேசமயம் அட்சய திருதியை அன்று உப்பு வாங்கும் பாரம்பரியமும் உள்ளது. அட்சய திருதியை அன்று உப்பு வாங்குவதால் பல நன்மைகள் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது.
இந்நாளில் உப்பு வாங்கி தானம் செய்வது வாழ்க்கையின் அனைத்து கஷ்டங்களையும் நீக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் எல்லா பிரச்சனைகளிலிருந்தும் உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. உப்பு தானம் செய்வதால் இந்நாளில் நாம் முன்னோர்களின் ஆசீர்வாதங்களையும் பெற முடியும் என ஐதீகமாக பார்க்கப்படுகிறது.
என்ன வகையான உப்பு வாங்க வேண்டும்?
அட்சய திருதியை நாளில் சாதாரண கல் உப்பு வாங்குவது மங்களகரமானதாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் கல் உப்பு வாங்குவது தான் லட்சுமி தேவியை மகிழ்விக்கும் என்றும், அவ்வாறு செய்வது வீட்டின் வாஸ்து குறைபாடுகளையும் நீக்கும் என்றும் நம்பப்படுகிறது. மேலும் இந்த நாளில் நீங்கள் வாங்கும் உப்பை குளியலறையில் ஒரு கண்ணாடி கிண்ணத்தில் சேமித்து வைத்தால் பலன் கிடைக்கும் என நம்பப்படுகிறது. இது கட்டிடக் குறைபாடுகளை நீக்கும். அதேநேரம் அட்சய திரிதியை நாளில் நீங்கள் வாங்கும் உப்பை சமையலுக்கும் பயன்படுத்தலாம்.
இந்த விசேஷ நாளில் நாம் கல் உப்பு வாங்குவது மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இந்த உப்பு, பல்வேறு இன்பங்களுக்கு காரணமான வெள்ளி கிரகம், மன அமைதிக்கு காரணமான கிரகமான சந்திரனுடனும் தொடர்புடையதாக நம்பப்படுகிறது. எனவே, இந்த நாளில் கல் உப்பு வாங்குவது செல்வத்தை அதிகரிக்கும். மன அமைதி கிடைக்கும் என சொல்லப்படுகிறது.
(இணையத்தில் பதிவிடப்படும் ஆன்மிக மற்றும் ஜோதிட நம்பிக்கையிலான தகவல்கள் அடிப்படையில் இந்த கட்டுரை கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் எவ்விதத்திலும் பொறுப்பேற்காது)