ஸ்லீப் டைவர்ஸ் என்றால் என்ன தெரியுமா? தம்பதிகள் தனித்தனியாக தூங்க காரணம்?
Sleep Divorce: தூக்கம் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில் ஸ்லீப் டைவர்ஸ் என்ற புது பிரச்னை இந்தியாவில் உருவாகியுள்ளது. அதில் திருமணமான தம்பதிகள் தனித்தனியாக உறங்குவதையே ஸ்லீப் டைவர்ஸ் என்ற வார்த்தை குறிக்கிறது. அதற்கான காரணங்கள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

உலக அளவில் தூக்கத்தின் (Sleep) முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ரெஸ்மெட்’ நிறுவனம் வெளியிட்ட 2025-ம் ஆண்டுக்கான ‘குளோபல் ஸ்லீப் சர்வே’ என்ற ஆய்வில் ஆச்சரியமிக்க தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி, இந்தியாவில் திருமணமான தம்பதிகளில் 78 சதவிகிதம் பேர் ஒரே படுக்கையில் தூங்காமல் தனித்தனி அறைகளில் உறங்குவதாக அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவுக்கு அடுத்ததாக சீனாவில் (China) 67 சதவிகித தம்பதிகளும் மற்றும் தென் கொரியாவில் 65 சதவிகித தம்பதிகளும் இந்த ஸ்லீப் டைவர்சை தேர்ந்தெடுத்திருக்கின்றனர். இங்கு குறிப்பிட்ட ‘ஸ்லீப் டைவர்ஸ்’ (Sleep Divorce) என்பது, கணவன் மனைவியாக இருந்தாலும் தனித் தனி அறைகளில் தூங்கும் முறையைக் குறிக்கிறது. இதில் முக்கிய காரணமாக, தூக்கத்தை பாதிக்கும் விஷயங்கள் கூறப்பட்டுள்ளன.
ஸ்லீப் டைவர்சிற்கு பின்னால் உள்ள காரணங்கள்:
குறட்டை விடுதல் போன்ற சத்தங்களால் 32 சதவிகிதம் பேரும், துணை அருகில் இருப்பதால் அமைதியற்ற உறக்கம் ஏற்படுவதாக 12 சதவிகிதம் பேரும் துணையுடனான ஒவ்வாமை காரணமாக 10 சதவிகிதம் பேரும் படுக்கையில் ஸ்மார்ட்போன் பயன்டுத்துவதால் 8 சதவிகிதம் பேரும் இந்த ஸ்லீப் டைவர்சை தேர்ந்தெடுத்திருக்கின்றனர். குறிப்பாக வயதில் இளம் தம்பதியினரை விட, மூத்த தம்பதியினரே அதிகமாக இந்த ஸ்லீப் டைவர்சை தேர்ந்தெடுப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.
இவ்வாறு தனித்தனியாக உறங்குவதால் தங்களது தூக்க தரம் அதிகரித்ததோடு, உறவிலும் ஒரு நிலைத்தன்மையையும், சில சமயங்களில் நெருக்கத்தையும் ஏற்படுத்துவதாக தெரிவிக்கின்றனர்.
ஒன்றாக தூங்குவதால் கிடைக்கும் நன்மைகள்
அதே நேரத்தில், ஒன்றாக தூங்குவது மனநலத்திற்கு நன்மை தரும் என நிபுணர்கள் கூறுகின்றனர். ‘ஆக்ஸிடோசின்’ என்ற ஹார்மோன் ஒன்றாக தூங்கும்போது தான் அதிகரிப்பதாகவும் அது மன அழுத்தம், கவலை, மனநல பாதிப்புகள் ஆகியவற்றைக் குறைப்பதாகவும் தெரிவிக்கின்றனர். . கூடுதலாக, உறவுத் தரத்திலும் மகிழ்ச்சியிலும் மேம்பாடு காணப்படுகிறது.
வேலை மற்றும் உடல்நலத்தில் பாதிப்புகள்
தூக்கக் குறைபாடு தெளிவான சிந்தனையை குறைக்கும். ஒரு நபர் 6 மணி நேரத்திற்கு குறைவாக தூங்கினால், அது முழுக்க தூங்காமல் இருப்பதற்கு சமம் என யு.எஸ். இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிசின் கூறுகிறது. தொடர்ந்து தூக்கக் குறைபாடுகள் இருந்தால் இதய நோய்கள் மற்றும் ஸ்ட்ரோக் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. இந்தியாவில் 47 சதவிகிதம் பேர் தூக்கமின்மையால் வேலைக்கு செல்ல முடியாமல் இருந்த அனுபவம் உண்டு. மேலும், 49% இந்தியர்கள் வாரத்திற்கு குறைந்தது மூன்று முறை தூங்க முடியாத நிலையை சந்திக்கிறார்கள்.
இந்த ஸ்லீப் டைவர்ஸ் இன்று அதிகமாகக் கேட்கும் ஒரு புதிய வாழ்க்கை முறை மாற்றமாகும். ஆனால், தூக்கத்தில் பிரச்னை ஏற்படுவதை தீர்க்க அதன் முதன்மை காரணிகளை மன அழுத்தம், வேலை முறை, உடல் நலம் போன்றவற்றை கவனத்தில் எடுத்துக்கொள்வது அவசியம். Sleeping Apart, Still Together: The Growing Trend of Sleep Divorce in India