சகோதரர்களுடன் இணைந்து காதலனின் ஆணுறுப்பை அறுத்த பெண்.. உ.பி.யில் அதிர்ச்சி சம்பவம்!
Woman Mutilate Genitals of Her Boyfriend | உத்தர பிரதேசம் கோரக்பூரில் 22 வயது இளைஞரை ஒரு பெண் தனது சகோதரர்களுடன் இணைந்து ஆண் உறுப்பை அறுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், இரு தரப்பினரும் மாறி மாறி புகார் தெரிவித்து வருகின்றனர்.

உத்தர பிரதேசம், ஏப்ரல் 17 : உத்தர பிரதேசத்தில் (Uttar Pradesh) 22 வயது இளைஞர் ஒருவரை அவரது காதலி மற்றும் அவரின் 4 சகோதரர்கள் இணைந்து ஆண் உறுப்பை அறுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட இளைஞரின் குடும்பத்தினர், அந்த பெண் இளைஞரை காதல் வலையில் விழ வைத்து மோசடி செய்ய நினைத்ததாக புகார் கூறியுள்ளனர். இதேபோல பெண் வீட்டு தரப்பில் இருந்து, இளைஞர் தவறாக நடந்துக்கொள்ள முயன்றதால் அதனை செய்ததாக கூறியுள்ளனர். இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து இரண்டு தரப்புகளும் என்ன கூறுகின்றனர் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
காதலனின் பிறப்பு உறுப்பை அறுத்த காதலியின் குடும்பத்தினர்
உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூர் (Gorakhpur) பகுதியை சேர்ந்தவர் மிதுன். 22 வயதாகும் இவருக்கு அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. அந்த பெண் அவரை விட 8 வயது மூத்தவர் என கூறப்படுகிறது. இது குறித்து கூறியுள்ள மிதுனின் தந்தை, அந்த பெண்ணுடன் மிதுன் ஒரு ஆண்டு காலமாக தொலைபேசியில் பேசி வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று தன்னை சந்திக்க வருமாறு அந்த பெண் அழைத்துள்ளார். மிதுனின் வருகைக்காக அந்த பெண்ணின் சகோதரர்கள் காத்துக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது மிதுனை அவர்கள் அடித்து துன்புறுத்தியதுடன் அவமானப்படுத்தியுள்ளனர் என்று கூறியுள்ளார்.
அப்போது அவர்கள் மிதுனின் கை மற்றும் கால்களை பிடித்துக்கொண்டு அந்த பெண்ணை வைத்து அவரின் ஆண் உறுப்பை அறுக்க வைத்துள்ளனர். இதனால் மிதுனுக்கு அதிக அளவிலான ரத்த போக்கு ஏற்பட்ட நிலையில், அவர்கள் அவரை வீட்டில் இருந்து வெளியே தூக்கி வீசியுள்ளனர். அவரை ரத்த காயங்களுடன் கண்ட உள்ளூர் வாசிகள் சிலர் அது குறித்து மிதுனின் தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து மிதுனை மீட்ட அவரது தந்தை அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முன்பகை காரணமாக நடைபெற்ற தாக்குதல்?
இந்த விவகாரம் குறித்து கூறியுள்ள மிதுனின் தந்தை, அந்த பெண்ணின் குடும்பத்திற்கும் தங்களுக்கும் பல காலமாக பகை நீடித்து வந்த நிலையில், பழி வாங்குவதற்காக அவர்கள் இவ்வாறு செய்துள்ளனர் என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். ஆனால், அந்த பெண்ணின் வீட்டார் அப்படியே மாறுபட்ட கதையை கூறியுள்ளனர். அதாவது, மிதுன் அந்த பெண்ணிடம் வீடு புகுந்த தவராக நடந்துக்கொள்ள முயற்சி செய்ததாகவும், தற்காப்புக்காகவே அவரது ஆண் உறுப்பை அறுத்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இரு தரப்பும் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வரும் நிலையில், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.