காஷ்மீரில் பதற்றம்.. முக்கிய பயங்கரவாதி சுட்டுக் கொலை.. இந்திய ராணுவம் அதிரடி!
Pahalgam Terror Attack : காஷ்மீரில் லஷ்கர் இ தொய்வாவின் தளபதிகளில் ஒருவரான அல்தாஃப் லல்லியை பந்திபோரா அருகே இந்தியா ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது. இந்த தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்கள் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.

கோப்புப்படம்
ஜம்மு காஷ்மீர், ஏப்ரல் 25: காஷ்மீரில் லஷ்கர் இ தொய்வாவின் தளபதிகளில் ஒருவரான அல்தாஃப் லல்லியை பந்திபோரா (Bandipora encounter) அருகே இந்தியா ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது. இந்த தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்கள் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையில், பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு தீவிரவாதிகளின் வீடுகள் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளான அடில் உசேன் தோக்கர் மற்றும் ஆசிப் ஷேக் ஆகிய இருவரின் வீடுகள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. அனந்த்நாக் மற்றும் அவந்திபுராவில் தீவிரவாதிகளின் வீடுகள் தகர்க்கப்பட்டன.
முக்கிய பயங்கரவாதி சுட்டுக் கொலை
2025 ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர் பலர் காயம் அடைந்தனர். இந்த கொடூர தாக்குதலுக்கு தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்வாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் பொறுப்பேற்றுள்ளது.
ஆனால், இந்த தாக்குதலுக்கு பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா குற்றச்சாட்டி வருகிறது. அண்டையில் கூட பேசிய பிரதமர் மோடி, பயங்கரவாதிகள் யாரும் தப்பிக்க மாட்டார் என உறுதியாக கூறினார். மேலும், பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், 2025 ஏப்ரல் 25ஆம் தேதியான இன்று காலை முதலே எல்லையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் இந்தியா என இருநாடுகள் ராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்திய ராணுவம் அதிரடி
பந்திபோரா பகுதியில் காலை முதலே பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்திய ராணுவம் நடவடிக்கை எடுத்து வருகிறது. பந்திபோரா மாவட்டத்தில் நடந்த தேடுதல் வேட்டையின் போது பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
பயங்கரவாதிகளுடனான மோதலில் இரண்டு பாதுகாப்புப் படையினரும் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பின்பு, லஷ்கர் இ தொய்வாவின் தளபதிகளில் ஒருவரான அல்தாஃப் லல்லியை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். பாரமுல்லா மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டுக் கோடு வழியாக ஊடுருவ முயன்ற இரண்டு பயங்கரவாதிகளை கொன்றனர்.
இதற்கிடையில், ஜம்மு காஷ்மீரில் 125க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர்களின் 75 முதல் 80 பேர் பள்ளத்தாக்கிலும், மீதமுள்ளவர்கள் ஜம்முவிலும் உள்ளனர். அவர்களில் கிட்டத்தட்ட 115-120 பேர் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவி வந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். அவர்களை ஒழிக்கும் முயற்சியில் இந்திய ராணுவம் மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.