அதிகாலையிலேயே சோகம்.. கோயிலில் சுவர் இடிந்து விழுந்து பக்தர்கள் 8 பேர் பலி.. ஆந்திராவில் அதிர்ச்சி!
Andhra Pradesh Temple Wall Collapse : ஆந்திராவில் சிம்மாசலத்தில் உள்ள நரசிம்ம கோயிலில் புதிதாக கட்டப்பட்ட 20 அடி உயரமுள்ள சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆந்திரா, ஏப்ரல் 30: ஆந்திர பிரதேச மாநிலம் சிம்மாசலத்தில் (simhachalam Temple wall Collapse) உள்ள கோயிலில் 2025 ஏப்ரல் 30ஆம் தேதியான இன்று அதிகாலையில் சுவர் இடிந்து விழுந்து விபத்து (andhra temple wall collapse) ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் வாங்க வரிசையில் காத்திருந்தபோது, சுவர் இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்துள்ளனர். அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆந்திராவில் கோயிலில் சுவர் இடிந்து விழுந்து 8 பேர் பலி
ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள சிம்மாசலம் நரசிம்ம சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்த கோயிலில் தற்போது சந்தன உற்சவத் திருவிழா நடைபெற்று வருகிறது.
ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சந்தன உற்சவம் நடைபெறுகிறது. இதனால், பக்தர்களின் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், 2025 ஏப்ரல் 30ஆம் தேதியான அதிகாலை சிம்மாசலம் கோயிலில் புதிதாக கட்டப்பட்ட 20 அடி நீளமள்ள ஒரு பகுதியின் சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த சுவர் 20 நாட்களுக்கு முன்பு தான் கட்டப்பட்டது. இந்த நிலயில், இந்த சுவருக்கு அருகில், 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுக்காக பக்தர்கள் காத்துக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் திடீரென சுவர் இடிந்து விழுந்துள்ளது. அப்போது, அங்கிருந்த பக்தர்கள் பலரும் இடிபாடுகளில் சிக்கினர்.
நடந்தது என்ன?
இந்த விபத்து குறித்து அறிந்ததும் போலீசாரும் மீட்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்கள் மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இன்னும் மீட்பு பணிகள் நடைபெறுவதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மாநில பேரிடர் மீட்புப் படையினர் உள்ளனர். அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட ஆந்திரப் பிரதேச உள்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் அனிதா வாங்கலபுடி சம்பவ இடத்திற்கு வந்தார். விபத்து குறித்து அறக்கட்டளைத் துறையின் முதன்மைச் செயலாளர் வினய் சான் கூறுகையில், ” மழையுடன் பலத்த காற்றும் வீசியது. காற்றின் காரணமாக, பந்தல்கள் விழுந்தன. அதிக மழை பெய்ததால் மண் தளர்ந்திருக்கலாம். இதனால், சுவர் இடிந்து விழுந்திருக்கலாம் என நாங்கள் நினைக்கிறோம்” என்றார்.