காங்கிரஸின் நலனுக்காக மட்டுமே வக்ஃப் சட்டம் மாற்றியமைக்கப்பட்டது – பிரதமர் மோடி குற்றச்சாட்டு
PM Modi: காங்கிரஸ் கட்சியின் சொந்த நலனுக்காக வக்ஃப் வாரியத்தின் சட்டத்தை மாற்றியமைத்ததாக ஹரியானாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் வக்ஃப் சட்டம் முறையாக பயன்படுத்தப்படவில்லை என்றும், வாரியத்தின் பெயரில் பல கோடி ஏக்கர் நிலம் இருப்பதாகவும் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

ஹரியானா, ஏப்ரல் 14: ஹரியானா சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய அவர், திருத்தப்பட்ட வக்ஃப் சட்டம் ஏழை எளிய இஸ்லாமியர்களை பாதுகாப்பதுடன், பழங்குடியின மற்றும் பட்டியலின மக்களின் நிலங்களை பாதுகாக்கும் என குறிப்பிட்டு பேசியுள்ளார். அவர்களின் நிலங்களை யாரும் அபகரிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார். மேலும், வக்ஃப் நிலம் முறையாகப் பயன்படுத்தப்பட்டிருந்தால் இன்றைய இஸ்லாமிய இளைஞர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க இவ்வளவு போராட வேண்டி இருக்காது என தெரிவித்துள்ளார்.
காங்கிரஸை தாக்கி பேசிய பிரதமர் மோடி:
हमारी सरकार बाबासाहेब की आकांक्षाओं के अनुरूप गरीब कल्याण और सामाजिक न्याय सुनिश्चित कर रही है, वहीं कांग्रेस ने उनके विचार और उनकी पहचान को हमेशा के लिए खत्म करने का प्रयास किया। pic.twitter.com/LJgq5cNeyi
— Narendra Modi (@narendramodi) April 14, 2025
ஹரியானா சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். முக்கியமாக ஹிசாரில் இருந்து அயோத்தியாவிற்கு புதிய விமான சேவை தொடங்கப்பட்டதோடு புதிய விமான முனையத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த விமான சேவை ஹிசாரில் இருக்கும் இளைஞர்களின் கனவுகளுக்கு சிறகை கொடுக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ” காங்கிரஸ் தனது சொந்த நலனுக்காக அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. வக்ஃப் பெயரில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளது. வக்ஃப் திருத்த சட்டம் கொண்டுவரப்பட்டதன் மூலம் நில அபகரிப்பு தடுத்து நிறுத்தப்படும். ஏழை, எலிய மக்களுக்கு இந்த நிலத்தால் பயனடைந்திருக்க வேண்டும். வக்ஃப் பெயரில் இருக்கும் நிலங்கள் நேர்மையாகப் பயன்படுத்தப்பட்டிருந்தால், இன்றைய இஸ்லாமிய இளைஞர்கள் வாழ்வாதாரத்திற்காக சிரமப்பட வேண்டி இருக்காது. அந்த சட்டத்தின் மூலம் நில மாஃபியாக்கள் மட்டுமே பயனடைந்துள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “ தற்போது கொண்டு வரப்பட்டுள்ள சட்டம் மிகவும் முக்கியமானது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த சட்டத்தின் மூலம் நலிவடைந்த, பிற்படுத்தப்பட்ட அல்லது பட்டியலின பழங்குடியின மக்களின் நிலங்களை அபகரிக்க முடியாது.
ஏழைகள், பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் இஸ்லாமிய விதவைகள் மற்றும் இஸ்லாமிய சமூகத்தின் குழந்தைகள் இந்த திருத்த சட்டத்தின் மூலம் அவர்களுக்குரிய உரிமைகளைப் பெறுவார்கள. அவர்களின் உரிமைகள் எதிர்காலத்தில் பாதுகாக்கப்படும். இதுவே பாபா சாகேப் அம்பேத்கரின் அரசியலமைப்பின் உண்மையான உணர்வு. 2014 முதல் இந்த அரசு, இதை அடைய பல நடவடிக்கைகளை எடுத்து வந்துள்ளது, பாபா சாகேப் அம்பேத்கரின் பாரம்பரியத்தை வரும் தலைமுறைகளுக்கு முன்னெடுத்துச் செல்லும்” என தெரிவித்துள்ளார்.