பன்னீர் தர மாட்டீங்களா? களேபரமான திருமண மண்டபம்.. இளைஞர் செய்த அட்ராசிட்டி!
Uttar Pradesh Wedding Chaos: திருமண பந்தியில் பன்னீர் வைக்காததால், டென்ஷனான இளைஞர், பேருந்தை விருந்தினர்கள் மீது ஏற்றியுள்ளார். இதில் 8க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததோடு, ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து மணமகள் வீட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

உத்தர பிரதேசம், ஏப்ரல் 29: உத்தர பிரதேசத்தில் நடந்த திருமணத்தில் பன்னீர் கிடைக்காததால், ஆத்திரம் அடைந்த இளைஞர், திருமண மண்டபத்தில் மினி பஸ்ஸை ஒட்டி சென்று உள்ளார். இதில் திருமணத்திற்கு வந்தவர்கள் மீது லேசான காயம் ஏற்பட்டுள்ளது. அதோடு, ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்களை அவர் சேதப்படுத்தி இருக்கிறார். திருமண பந்தியில் சரியாக உணவு பரிமாறப்படவில்லை என்றால் சில அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவது வழக்கமாகிவிட்டது. குறிப்பாக, திருமண பந்தியில் உணவு கிடைக்காததால், திருமணம் கூட நின்ற சம்பவங்கள் கூட அரங்கேறி இருக்கின்றன.
பன்னீர் தர மாட்டீங்களா?
அண்டையில் கூட, கர்நாடகாவில் தண்ணீர் பாட்டில் பந்தியில் வைக்காததால் ஏற்பட்ட பிரச்னையில் கல்யாணமே நின்று போனது. இந்த நிலையில், தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது, திருமண பந்தியில் பன்னீர் வைக்காததால், இளைஞர் ஒருவர் திருமண மண்டபத்தில் மினி பேருந்தை ஏற்றியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் சந்துவாலி மாவட்டத்தில் உள்ள ஹமீத்பூர் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஹமீத்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்நாத் யாதவ். இவரது மகளின் திருமணம் அப்பகுதியில் உள்ள மண்டபத்தில் நடந்தது. கடந்த 2025 ஏப்ரல் 26ஆம் தேதி திருமண வரவேற்பு நடந்தது.
அனைத்து சுமூகமாக நடந்து கொண்டிருக்கும்போது, அதே பகுதியை சேர்ந்த தர்மேந்திர யாதவ் திருமணத்திற்கு வந்துள்ளார். திருமணத்திற்கு வந்த அவர், நேராக பந்தியில் சாப்பிடுவதற்காக அமர்ந்தார். அதன்பிறகு, அவருக்கு வைக்கப்பட்ட இலையில் பன்னீர் மட்டும் இல்லை. ஆனால், மற்றவர்களுக்கு பன்னீர் வைக்கப்பட்டதாக தெரிகிறது.
விருந்தினர்களை மீது பேருந்தை ஏற்றிய இளைஞர்
இதனால், கடுப்பான தர்மேந்திர யாதவ் தனக்கு பன்னீர் வைக்காதது குறித்து வாக்குவாதம் செய்தார். இதனை அடுத்து, அவர், தனது மினி பேருந்தை திருமண மண்டபத்திற்குள் நுழைத்து ரகளையில் ஈடுபட்டார். இதில், திருமண மண்டபத்தில் இருந்த 8க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து பேசிய ராஜ்நாத் யாதவ் கூறுகையில், “தர்மேந்திர யாதவ் திருமணத்திற்கு வந்து சாப்பிட ஆரம்பித்தார். அப்போது அவர் பன்னீர் கேட்டார். ஆனால், கிடைக்கவில்லை. இதனால், கோபமடைந்து திருமண விழாவின் நடுவில் ஒரு பேருந்தை ஓட்டினார்.
இதில் எட்டு பேர் காயமடைந்தனர். மேலும், ரூ. 3 லட்சத்திற்கும் அதிகமாக மதிப்புள்ள பொருட்கள் தேசம் அடைந்தன. அதன்பிறகு அவர், திருமண மண்டபத்தில் இருந்து தப்பிச் சென்றார்” என்றார். தர்மேந்திர யாதவ் வாகனத்தை திருமண மண்டபத்திற்குள் ஏற்றியதில் மணமகனின் தந்தை மற்றும் மணமகளின் மாமா உட்பட பலர் காயமடைந்தனர். அவர்கள் வாரணாசியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து மணமகள் வீட்டார் புகார் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.