Pahalgam Terror Attack: பிரதமர் மோடி தலைமையில் அவசர கூட்டம்.. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் தீவிர ஆலோசனை!

India Pakistan Relations: பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்தியா-பாகிஸ்தான் உறவில் பெரும் பதற்றம் நிலவுகிறது. பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் பாதுகாப்புப் படைத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். தாக்குதலுக்குப் பதிலடி கொடுப்பது, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவது உள்ளிட்ட விஷயங்கள் ஆலோசனையில் விவாதிக்கப்பட்டன. இந்தியா தீவிர நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Pahalgam Terror Attack: பிரதமர் மோடி தலைமையில் அவசர கூட்டம்.. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் தீவிர ஆலோசனை!

பிரதமர் மோடி தீவிர ஆலோசனை

Published: 

29 Apr 2025 19:00 PM

டெல்லி, ஏப்ரல் 29: பஹல்காம் தாக்குதலுக்கு (Pahalgam Terror Attack) பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகளில் மிக பெரிய சிக்கல்கள் எழுந்து வருகிறது. காஷ்மீரில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் ஒழிக்கப்படுவார்கள் என்றும், எதிரிகளுக்கு பாடம் கற்பிக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, மத்தியில் உள்ள மோடி அரசாங்கம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்வது மட்டுமின்றி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஒவ்வொரு விவரத்தை ஆராய்ந்து வருகிறது. இந்தநிலையில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் பாதுகாப்பு படைத் தலைவர் அனில் சவுகான் ஆகியோருடன் பிரதமர் மோடி (PM Modi) ஆலோசனை நடத்தி வருகிறார்.

எதற்கு இந்த ஆலோசனை கூட்டம்..?

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்களை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான கூட்டத்தில், முப்படைகளின் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர். 26 பேர் பயங்கரவாத தாக்குதலால் கொல்லப்பட்டதை தொடர்ந்து, இந்த கூட்டம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்படலாம். தொடர்ந்து, இந்திய அரசாங்கம் பயங்கரவாத தாக்குதல் குறித்து என்ன பதில் கொடுக்க வேண்டும் என்பது குறித்தும், சிந்து நதி நீ ஒப்பந்தத்தை எவ்வாறு முன்னெடுத்து செல்வது குறித்து விவாதிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

பிரதமர் மோடியை சந்தித்த பாதுகாப்புதுறை அமைச்சர்:

முன்னதாக, நேற்று அதாவது 2025 ஏப்ரல் 29ம் தேதி பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரதமர் மோடியை சந்தித்தார். முதலில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்த தகவல்களை ராணுவ உயர் அதிகாரிகளிடமிருந்து பெற்றுக்கொண்ட ராஜ்நாத் சிங், பின்னர் லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமரின் இல்லத்திற்கு சென்று பஹல்காம் தாக்குதல் குறித்த புதிய அப்டேட்களை பிரதமர் மோடியிடம் வழங்கினார். இருப்பினும், இந்த சந்திப்பு தொடர்பான தகவல்கள் முற்றிலும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

பஹல்காமில் நடந்தது என்ன..?

2025 ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு – காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். மேலும், 17 பேர் காயமடைந்துள்ளனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் காடு வழியாக பைசரன் பள்ளத்தாக்குக்கு வந்து தாக்குதலுக்கு பிறகு தப்பி ஓடிவிட்டனர். அதன்பிறகு, ஜம்மு காஷ்மீர் காடுகளில் இராணுவ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஹலிகாப்டர்கள் முதல் ட்ரோன்கள் வரை கண்காணிப்புகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.