பாகிஸ்தான் உடனான அனைத்து வர்த்தக உறவுகளும் துண்டிப்பு.. CAIT அதிரடி முடிவு!
India Cuts Trade Ties with Pakistan | பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்திய அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், பாகிஸ்தான் உடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு துண்டித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முக்கிய விவகாரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

சென்னை, ஏப்ரல் 27 : பஹல்காம் தாக்குதலை (Pahalgam Attack) தொடர்ந்து பாகிஸ்தான் (Pakistan) உடனான அனைத்து வர்த்தக உறவையும் துண்டிப்பதாக CAIT (Confederation of All India Traders) முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், பாகிஸ்தான் உடனான அனைத்து வர்த்தக உறவுகளை துண்டிப்பதற்கு ஆதரவு அளித்து அனைத்து வர்த்தகர்களும் வாக்களித்த நிலையில், இந்த முடிவு எடுக்கப்படுள்ளதாக ANI செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மீது இந்திய அரசு பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், இந்திய வர்த்தக கூட்டமைப்பின் இந்த முடிவு அதனை மேலும் கடுமையாக்கியுள்ளது.
பஹல்காமில் படுகொலை செய்யப்பட்ட 26 சுற்றுலா பயணிகள்
ஜம்மு காஷ்மீரின் (Jammu and Kashmir) பஹல்காம் (Pahalgam) பகுதியில் ஏப்ரல் 22,2025 அன்று பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். கொலை செய்யப்பட்ட சுற்றுலா பயணிகளில் இரண்டு பேர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள். சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தொடுத்த இந்த கொடூர தாக்குதல் உலகையே உலுக்கிய நிலையில் இந்தியாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (The Resistance Front) அமைப்பு இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்ற நிலையில், பாகிஸ்தான் மீது இந்திய அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சிந்து நதிநீர் நிறுத்தம், அட்டாரி- வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் என பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தற்போது பாகிஸ்தான் உடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் CAIT அமைப்பு துண்டித்துள்ளது.
பாகிஸ்தான் உடனான அத்தனை வர்த்தக உறவுகளும் துண்டிப்பு
புவனேஸ்வரின் நடைபெற்ற இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் இரண்டு நாட்கள் தேசிய நிர்வாக குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் 26 மாநிலங்களை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற நிலையில், அவர்கள் அனைவரும் பாகிஸ்தான் உடனான அனைத்து வர்த்தக உறவுகளை துண்டிப்பதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பஹல்காம் தாக்குதலுக்கு பொறுப்பானவர்களுக்கும் அவர்களின் கூட்டாளிகளுக்கும் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.