பாகிஸ்தானுக்கு பதிலடி.. 16 யூடியூப் சேனல்களுக்கு இந்தியாவில் தடை!

India Bans 16 Pakistan YouTube Channels | ஜம்மு & காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து, பாகிஸ்தான் மீது இந்திய அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், பாகிஸ்தானை சேர்ந்த 16 யூடியூப் சேனல்களுக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு பதிலடி.. 16 யூடியூப் சேனல்களுக்கு இந்தியாவில் தடை!

மாதிரி புகைப்படம்

Updated On: 

28 Apr 2025 13:39 PM

சென்னை, ஏப்ரல் 28 : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை (Pahalgam Terror Attack) தொடர்ந்து இந்திய அரசு பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது பாகிஸ்தானை சேர்ந்த 16 யூடியூப் சேனல்களுக்கு (Pakistan YouTube Channels) இந்தியாவில் தடை வித்தித்துள்ளது. ஏற்கனவே சிந்து நதி நீர் நிறுத்தம், அட்டாரி – வாகா எல்லை மூடல் என இந்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கையாக யூடியூப் சேனல்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. அரசின் இந்த முடிவு குறித்து விரிவாக பார்க்கலாம்.

பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட அப்பாவி சுற்றுலா பயணிகள்

ஜம்மு & காஷ்மீர் (Jammu and Kashmir) பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22, 2025 அன்று சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் கொடூர துப்பாக்கிசூடு தாக்குதல் நடத்தினர். இதில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இருவர் உட்பட 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுற்றுலா பயணிகளுக்கு நடைபெற்ற இந்த கோர சம்பவம், உலக நாடுகளை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதற்கிடையே பாகிஸ்தானை சேர்ந்த தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (The Resistance Front) என்ற அமைப்பு சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. இதன் காரணமாக கடும் கோபம் கொண்ட இந்தியா, பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இந்தியா

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்திய அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக அட்டாரி – வாகா எல்லை மூடல், சிந்து நதி நீர் நிறுத்தல், பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம், பாகிஸ்தானியர்களின் விசா ரத்து, பாகிஸ்தான் தூதரகத்திற்கான பாதுகாப்பு வாபஸ் உள்ளிட்ட நடவடிக்கைகளை இதுவரை மேற்கொண்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக பாகிஸ்தான் யூடியூப் சேனல்களுக்கு தடை விதித்துள்ளது.

முடக்கப்பட்ட 16 யூடியூப் சேனல்கள்

இந்த நிலையில் Dawn News, Samma TV, Ary News உள்ளிட்ட யூடியூப் சேனல்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பாகிஸ்தன முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தரின் யூடியூப் சேனலும் அடங்கும். இந்தியா குறித்து வெறுப்பு செய்தியகளை பரப்புவது, பொய் செய்திகளை வெளியிடுவது உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இந்த யூடியூப் சேனல்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.