அதிர்ந்த ஆந்திரா.. 8 மாத கர்ப்பிணி கழுத்து நெரித்து கொலை.. கணவர் செய்த கொடூரம்!
Andhra Crime News : ஆந்திராவில் 8 மாத கர்ப்பிணியை கணவர் கழுத்தை நெரித்து கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்ட இவர்கள், கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை போட்டு கொண்டு இருப்பதாக தெரிகிறது.

ஆந்திரா, ஏப்ரல் 15: ஆந்திராவில் 8 கர்ப்பிணி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 8 மாத கர்ப்பிணியை கணவர் கழுத்தை நெரித்து கொடூரமாக கொன்றுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், கணவர் அவரை கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் ஞானேஷ்வர். இவரது மனைவி அனுஷா (27). ஞானேஷ்வர், சாகர்நகர் என்ற பகுதியில் உணவு கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
8 மாத கர்ப்பிணி கழுத்து நெரித்து கொலை
இந்த தம்பதி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். முதலில் சந்தோஷமாக சென்ற இவர்களது உறவில், கடந்த ஓராண்டாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பல விஷயங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்ட அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் இவர்களுக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதற்கிடையில், அனுஷா, 8 மாதம் கர்ப்பமாகவும் உள்ளார். இந்த நிலையிலும் இவர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில், 2025 ஏப்ரல் 14ஆம் தேதி காலை இவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த வாக்குவாதம் நீடித்த நிலையில், ஆத்திரத்தில் 8 மாத கர்ப்பிணியான அனுஷாவை, ஞானேஷ்வர் கழுத்தை நெரித்துள்ளார்.
கணவர் செய்த கொடூரம்
இதில், அனுஷா மயக்கமடைந்திருக்கிறார். இதனால் பதற்றம் அடைந்த ஞானேஷ்வர், அனுஷாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அனுஷாவை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
பின்னர், அவரை தன் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக காவல்நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார். இதனை போலீசார் உறுதி செய்தனர். இதனை அடுத்து, போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஞானேஷரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், அனுஷாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. 8 மாத கர்ப்பிணியை கணவர் கழுத்தை நெரித்து கொலை செய்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, தெலங்கானாவில் கடந்த 2025 ஜனவரி மாதத்தில் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கணவர் கொலை செய்தார். மேலும், பிரஷர் குக்கரில் உடல் பாகங்களை வேகவைத்தது அம்மாநிலத்தையே அதிரவைத்தது.
நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறை, கொலை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. பெண்களுக்கு தெரியாத நபர்களை விட, தெரிந்த நபர்கள் தான் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே, பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றச் செயல்களை தடுக்க மத்திய, மாநில அரசும் தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், குற்றச் செயல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.