வேறு சாதி இளைஞரை காதலித்த சிறுமி.. கழுத்தை நெறித்து கொன்ற தாய்!

Andhra Pradesh Honour Killing | ஆந்திர பிரதேசத்தில், வேறு சாதிய இளைஞரை காதலித்த 16 வயது சிறுமியை அவரது தாயே கொலை செய்துள்ளார். அதுமட்டுமன்றி, காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாய், காதலனை போக்சோவில் சிக்க வைத்து, மகளின் கர்ப்பத்தையும் கலைத்தனர். இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

வேறு சாதி இளைஞரை காதலித்த சிறுமி.. கழுத்தை நெறித்து கொன்ற தாய்!

மாதிரி புகைப்படம்

Published: 

15 Apr 2025 09:00 AM

ஆந்திர பிரதேசம், ஏப்ரல் 15 : ஆந்திர பிரதேசத்தில் (Andhra Pradesh) வேறு சாதி இளைஞரை காதலித்ததால் பெற்ற தாயே தனது 16 வயது மகளை ஆணவ கொலை (Honour Killing) செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 34 வயது பெண் ஒருவரை கைது செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது தான் இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், பெற்ற தாயே தனது மகளை கொலை செய்தது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆந்திர பிரதேசத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

இந்தியாவை பொருத்தவரை பல்வேறு இடங்களில் இன்றும் கூட சாதிய பாகுபாடுகள் பார்க்கப்படுகின்றன. ஒரு மனிதனை சாதி ரீதியாக கீழ்த்தரமாக நடத்துவது, துன்புறுத்துவது என பலவேறு குற்ற சம்பவங்கள் நாள்தோறும் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக இந்திய திருமணங்களில் சாதி முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு ஆணோ அல்லது பெண்ணோ திருமணம் செய்ய முடிவு செய்தால், அவர்கள் தங்கள் சாதியை சேர்ந்த இணையை தான் தேர்வு செய்ய வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது.

அவ்வாறு வேற்று சாதியை சேர்ந்த ஆணையோ அல்லது பெண்ணையோ ஒருவர் காதலித்துவிட்டால் அந்த நபரை கொலை செய்யும் அளவுக்கு கூட பெற்றோர்களும், உறவினர்களும் துணிந்து விடுகின்றனர். தங்களின் பிள்ளைகளின் மகிழ்ச்சி, உயிர் ஆகியவற்றை விடவும் மேலாக அவர்கள் சாதியை உயர்த்தி பிடிக்கின்றனர். இதன் காரணமாக ஏராளாமான சாதி ஆணவ படுகொலைகள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், ஆந்திர பிரதேசத்தில் வேற்று சாதி இளைஞரை காதலித்ததால் பெற்ற தாயே தனது மகளை கொலை செய்த கொடூர சமபவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

சாதி வெறி – பெற்ற தாயே மகளை கொலை செய்த கொடூரம்

ஆந்திர பிரதேச மாநிலம் விஜயவாடா பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்த நிலையில், இவர்கள் இருவரும் 2024-ல் திருமணம் செய்துக்கொண்டுள்ளனர். ஆனால், அந்த சிறுமிக்கு 16 வயதே ஆன நிலையில், அவரது தாயார் சிறுமியின் காதலன் மீது காவல் நிலையத்தில் போக்சோ புகார் அளித்துள்ளார். இந்த நிலையில், திருமணம் முடிந்த ஒருசில நாட்களிலேயே அந்த இளைஞர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே சிறுமி கர்ப்பமாகியுள்ளார். ஆனால் சிறுமியின் தாயார், அவரை கட்டாயப்படுத்தி கர்ப்பத்தை கலைத்துள்ளார். இந்த நிலையில், சமீபத்தில் அந்த இளைஞர் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். இதன் காரணமாக சிறுமி அவரை செல்போன் மூலம் தொடர்புக்கொள்ள முயற்சி செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தாய் சிறுமியை வாய் மற்றும் மூக்கை பொத்தி கொலை செய்துள்ளார். இதனை தொடர்ந்து சிறுமியின் உடலை அவர் அவசர அவசரமாக புதைத்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக சந்தேகம் எழவே காவல்துறைக்கு தகவல் சென்றுள்ளது. இந்த நிலையில், காவல் நிலையத்தில் சரணடைந்த சிறுமியின் தாய் தனது மகளை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.