Andhra Pradesh Fire: ஆந்திராவில் அதிர்ச்சி..! பட்டாசு ஆலை வெடிப்பு.. இதுவரை 8 பேர் உயிரிழப்பு!

Andhra Fireworks factory Explosion: ஆந்திராவின் அனகப்பள்ளி மாவட்டம், கோடவுரட்லா மண்டலத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அதிர்ச்சி தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Andhra Pradesh Fire: ஆந்திராவில் அதிர்ச்சி..! பட்டாசு ஆலை வெடிப்பு.. இதுவரை 8 பேர் உயிரிழப்பு!

ஆந்திரா பட்டாசு ஆலை விபத்து

Published: 

13 Apr 2025 16:52 PM

ஆந்திரா, ஏப்ரல் 13: ஆந்திரா மாநிலத்தை (Andhra Pradesh) அடுத்த அனகப்பள்ளி மாவட்டத்தில் ஒரு பயங்கரமான சோக சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கோடவுரட்லா மண்டலம் கைலாசபட்டணத்தில் உள்ள பட்டாசு உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் (Fireworks) 8 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் மேலும் 6 பேர் பலத்த காயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள சமர்லகோட்டாவை சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது. காயமடைந்தவர்கள் விசாகப்பட்டினம் கேஜிஹெச் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இறந்தவர்களின் விவரங்கள்:

கைலாசப்பட்டினம் கிராமத்தை சேர்ந்த 45 வயதான தாதாபாபு, 45 வயதான யாடி கோவிந்த், ராஜ்பேட்டையை சேர்ந்த 38 வயதான தாடி ராமலட்சுமி, சமர்லகோட்டாவை சேர்ந்த 38 வயதான நிர்மலா, 40 வயதான புரம் பாப்பா, 40 வயதான வேணுபாபு, சவுடுவாடாவை சேர்ந்த சேனாபதி பாபுராவ், விசாகப்பட்டினத்தை சேர்ந்த 30 வயதான மனோகர் ஆகியோர் உயிரிழந்தனர். உயிரிழந்த அனைவரும் பட்டாசு உருவாக்கப்படும் ஆலையில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தது தெரியவந்தது.

பட்டாசு ஆலை இருந்தது எங்கே..?

ஆந்திரா மாநிலம் கோடவுரட்லா மண்டல மையத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. மேலும், பட்டாசுகள் தயாரிக்க இந்த மிகவும் பிரபலமான இடம் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கம்போல் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டுக்கொண்டிருந்தபோது ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது. இந்த வெடிப்பின் சக்தியால் அந்த கட்டமைப்பு திடீரென இடிந்து விழுந்தது. அப்போது, காயமடைந்தவர்களில் ஒன்று அல்லது 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது. தற்போது சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

வெடிவிபத்து நடந்த நேரத்தில் தொழிற்சாலையில் 15 தொழிலாளர்கள் இருந்ததாக அறியப்படுகிறது. மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் விஜயகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் சந்திரபாபு அதிர்ச்சி:

ஆந்திரா மாநிலம் கோடவுரட்லா மண்டலத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து முதலமைச்சர் சந்திரபாபு தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்துறை அமைச்சர் அனிதா, மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி ஆகியோரிடம் தொலைபேசியில் பேசி விவரங்களை தெரிந்து கொண்டார். இதனை தொடர்ந்து, காயமடைந்தவர்களின் உடல்நிலை குறித்து அதிகாரிகள் முதலமைச்சரிடம் விளக்கினர். காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க நர்சிபட்டணம் ஆர்.டி.ஓவுக்கு உத்தரவிடப்பட்டது. மேலும், படுக்கைகள், வெண்டிலேட்டர்கள் மற்றும் ஊழியர்கள் கிடைக்குமாறும் முதலமைச்சர் உத்தரவிட்டார்.