ஆய்வகத்தில் உருவாகும் பற்கள் – இனி பல் இழப்புக்கு நிரந்தர தீர்வு!
Future of Dentistry: லண்டனை சேர்ந்த கிங் காலேஜின் பல் மருத்துவத்துறை ஆய்வகத்தில் இயற்கையாக பற்களை வளர செய்து சாதனை படைத்திருக்கிறார்கள். இது எவ்வாறு சாத்தியப்பட்டது, வருங்காலத்தில் இதனால் பல் மருத்துவ துறையில் ஏற்படப்போகும் மாற்றங்கள் ஆகியன குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மனிதர்களுக்கு பற்கள் (Tooth) என்பது மிகவும் அத்தியாவசிய தேவைகளில் ஒன்று. அவை உணவை மென்று விழுங்க உதவி செய்து, உணவின் சத்துக்களை முழுவதுமாக கிடைக்க உதவுகின்றன. மேலும் நம்முடைய முக வடிவத்தையும பேசும் முறையையும் நிர்ணயிப்பதில் பற்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பல நவீன சிகிச்சை முறைகள் வந்துவிட்ட அதே வேளையில் பற்களுக்கு சிகிச்சை அளிப்பது சிக்கலானதாகவே இருக்கின்றன. மேலும் உணவு பழக்கவழக்கங்களின் காரணமாக குழந்தைகள் முதலே ஈறுகளில் வீக்கம், பல் சிதைவு, பற்களில் இடைவெளி என பற்களினால் பாதிப்பை எதிர்கொள்கின்றனர். மேலும் பற்களை அழகுபடுத்த பிரேசஸ் அணிவது, பற்களில் உள்ள இடைவேளைகளை குறைக்க ரூட் கேனால் (Root Canal) சிகிச்சை எடுத்துக்கொள்வது உள்ளிட்ட சிகிச்சைகளை எடுத்துக்கொள்கின்றனர்.
இந்த நிலையில் டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள கட்டுரையின் படி, லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியின் பல் மருத்துவத்துறை நடத்திய ஒரு வித்தியாசமான ஆராய்ச்சியில், மனித பற்களை ஆய்வகத்தில் வளர்க்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில், விஞ்ஞானிகள் மனித உடலில் உள்ள ஒரு சிறிய ஸ்டெம் செல்ஸ்களை (stem cells) பயன்படுத்தி புதிய பல் செல்களை உருவாக்கி, அவற்றை வளர்ச்சியடையச் செய்துள்ளனர். சில மாதங்களில், அந்த செல்கள் பல் வடிவில் வளரத் தொடங்கியிருக்கின்றன. இது இயற்கையில் வளரும் பற்களைப் போலவே அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, ஆய்வகத்தில் பற்களை உருவாக்கும் முயற்சிகள் பல முறை தோல்வியடைந்தன. அதற்கு முக்கிய காரணம், செல்கள் (cells) ஒன்றொடு ஒன்று சரியாக தொடர்பு கொள்ள முடியாமல் போனது. இந்த நிலையில் முழு பல்லை ஆய்வகத்தில் வளர்த்து பிறகு அதை நோயாளியின் வாயில் பொருத்துவது எனவும், பல் வளர்ச்சி ஆரம்ப நிலையிலுள்ள செல்களை நோயாளியின் வாயில் நேரடியாக நட்டு, அங்கு இயற்கையாகவே வளர அனுமதிப்பது எனவும் ஆய்வாளர்கள் இரண்டு முக்கியமான வழிகளில் முயற்சித்து வருகின்றனர்.
எதிர்காலத்தில் இதனால் ஏற்படக்கூடிய பலன்கள்
பல் இழந்த நபர்களுக்கு, இம்பிளான்ட் (Implant) போன்ற செயற்கை முறைகளுக்கு பதிலாக இயற்கையாக உருவான பற்களை மாற்ற முடியும். செயற்கை பற்கள் போல் அல்லாமல் நமது உடலோடு நன்கு ஒத்துழைக்கும் என்பதால் இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறைவாக இருக்கும். முக அழகு, உணவுகளை நன்றாக மெல்லும் திறன், பேசும் திறன் உள்ளிட்டவைகளில் பாதிப்புகள் இருக்காது. இது எதிர்காலத்தில் பல் மருத்துவத்தில் புரட்சியை ஏற்படுத்தும். இயற்கையான பற்கள் பொருத்துவதற்கு எளிதான வழி. இனி பற்களை இழந்தால் அதனை இயற்கையாக வளர செய்ய முடியும்.
இது சாத்தியமா?
தற்போது இது ஆய்வு நிலையில் மட்டும் சாத்தியமாகியுள்ளது. ஆனால் அடுத்த 5 முதல்10 ஆண்டுகளில், இந்த மாற்றம் முழுமையாக பொதுமக்களுக்கு கிடைக்கும் என்பது ஆய்வாளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இது நிச்சயமாக பல் மருத்துவத்தில் புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.