Priya Prakash Varrier : மேடையில் விஜய்யின் ஏஐ வீடியோ.. நம்பி ஏமாந்த பிரியா பிரகாஷ் வாரியர்.. கொந்தளிக்கும் ரசிகர்கள்!
Thalapathy Vijays AI Video : தமிழில் இரண்டு திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், பல ரசிகர்களைக் கவர்ந்து வருபவர் பிரியா பிரகாஷ் வாரியார். இவர் அஜித்குமாரின் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படத்தில் முக்கியமான தோற்றத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இவருக்கு, விஜய் வாழ்த்து சொல்வதாக ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ வெளியிடப்பட்டது. தற்போது அந்த வீடியோவானாது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரியா பிரகாஷ் வாரியர்
மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருந்து வருபவர் பிரியா பிரகாஷ் வாரியர் (Priya Prakash Varrier) . இவர் நடிகர் தனுஷின் (Dhanush) நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் (Nilavuku En Mel Ennadi Kobam) என்ற படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகினார். இந்த படத்தில் 2வது கதாநாயகியாக நடித்திருந்தார். தனுஷ் இயக்கிய இந்த படமானது எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பைப் பெறவில்லை. இதைத் தொடர்ந்து நடிகை பிரியா பிரகாஷ் வாரியர், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் வெளியான குட் பேட் அக்லி ( Good Bad Ugly) படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸின் காதலியாக நடித்திருந்தார். இந்த படத்தில் மிகவும் வித்தியாசமான ரோலில் நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் நடிகர் அர்ஜுன் தாஸுடன் “தொட்டுத் தொட்டு பேசும் சுல்தானா” என்ற பாடலுக்கு நடனமாடி ஒட்டுமொத்த இளைஞர்களின் கனவுக் கன்னியாகவே மாறினார் என்று கூறலாம்.
இந்த படத்தில் இவரின் நடனமானது மிகவும் வரவேற்கப்பட்டது. இவரைக் குட்டி சிம்ரன் என்றும் பலரும் அழைத்து வருகின்றனர். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மிகவும் பிரபலமான இவர், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சியில் அவர் மேடையில் பேசிக்கொண்டு இருக்கும்போது, நடிகர் தளபதி விஜய்யின் வீடியோ ஒன்று வெளியாகியது.
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ :
She thought it was real🫣💔pic.twitter.com/xJyNsJMnPd
— AmuthaBharathi (@CinemaWithAB) April 23, 2025
அந்த வீடியோவில் விஜய், நடிகை பிரியா பிரகாஷ் வாரியரிடம் , அந்த ஹிட் பாடலுக்கு ஒரு நடனமாடும்படி கேட்ட மாதிரி இருந்தது. ஆனால் இந்த வீடியோ உண்மையாக விஜய் பேசியதில்லை என்று தெளிவாகத் தெரிகிறது. AI மூலம் உருவாக்கப்பட்ட இந்த வீடியோவானது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த வீடியோவை உண்மை என நம்பி நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் மேடையில் கண் கலங்கியுள்ளார். இவ்வளவு பெரிய நடிகர் தனது நடனத்தைப் பிடித்திருப்பதாக சொல்லியதை எண்ணி கண் கலங்கினார். ஆனால் தொகுப்பாளர் இந்த வீடியோ உண்மை இல்லை, ஏஐ மூலம் உருவாகப்பட்டது எனக் கூறினார். இதைத் தொடர்ந்து, தற்போது இந்த வீடியோ இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அது எப்படி ஒரு பெரிய நடிகரின் வீடியோவை இவ்வாறு கீழ்த் தரமாக ஏஐ தொழில்நுட்பத்தை வைத்து தவறாக பயன்படுத்துகிறார்கள் எனவும் விஜய் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.
இயக்குநரிடம் வேண்டுகோள் :
நடிகை பிரியா பிரகாஷ் வாரியருக்குத் தொடர்ந்து மலையாள சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்ற காரணத்தினால், அவர் தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நுழைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இவர் குட் பேட் அக்லி திரைப்படத்தின் வெற்றி விழாவின் போது, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனிடம் வெளிப்படையாகவே, இனிவரும் படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுக்கும்படி கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.