ஹீரோ டூ வில்லன்.. சிறகடிக்க ஆசை சிட்டி யாருன்னு தெரியுமா?
விஜய் டிவியின் "சிறகடிக்க ஆசை" சீரியலில் சிட்டி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் கார்த்தி, தனது 10 ஆண்டு கால சினிமா பயணம் மற்றும் போராட்டங்களைப் பகிர்ந்துள்ளார். பொறியாளராகப் பணியாற்றிய அவர், 300-க்கும் மேற்பட்ட ஆடிஷன்களில் கலந்து கொண்டதாகவும், "சிறகடிக்க ஆசை" மூலம் அங்கீகாரம் பெற்றதாகவும் கூறியுள்ளார்.

பொதுவாக திரைத்துறைக்கு வரும் பெரும்பாலானோர் பின்னால் மிகப்பெரிய அழுத்தமான வரலாறு என்பது இருக்கும். ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் பல போராட்டங்களை கடந்து தான் திரைத்துறைக்குள் வருவார்கள். சிலருக்கு அந்த வாய்ப்பு சரியாக அமையும், சிலருக்கு அமையாது. ஆனால் ஏதேனும் ஒரு இடத்தில் தன்னுடைய நடிப்பு அங்கீகரிக்கப்பட்டாலே வெற்றி தான் என நினைப்பார்கள். அப்படியாக விஜய் டிவியில் (Vijay Television) ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை (Siragadikka Aasai) சீரியலில் சிட்டி என்ற வில்லன் கேரக்டரில் நடித்து வருபவர் நடிகர் கார்த்தி. கிட்டதட்ட 10 ஆண்டுகாலமாகவே அவர் சினிமாவுலகில் இருக்கிறாராம். நேர்காணல் ஒன்றில் தன்னுடைய கடந்த கால வாழ்க்கை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதனைப் பற்றி நாம் காணலாம்.
அதாவது, “சிறகடிக்க ஆசை சீரியலில் கிடைத்த வாய்ப்பு நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. இந்த வாய்ப்பு எனக்கு இயக்குனர் குமரன் மூலமாக தான் கிடைத்தது. வெளியில் எங்கேயும் சென்றால் சிறகடிக்க ஆசை சிட்டி என்ற ஒரு அடையாளம் கிடைத்துள்ளது. நான் எதற்காக சினிமாவிற்குள் வந்தேன் என்ற கேள்விக்கான நிறைவான பயணமாக இது தெரிகிறது” என கார்த்தி கூறியுள்ளார்.
ஹீரோ டூ வில்லன்
சினிமாவில் ஹீரோவாக நடிப்பதற்காக தான் வந்தேன். ஆனால் இன்றைக்கு இருக்கும் சூழலில் ஹீரோவாக அவ்வளவு எளிதில் யாரும் மாறிவிட முடியாது. அதனால் நமக்கு என ஒரு அங்கீகாரம் ஏற்படுத்த வேண்டும் என நினைத்தேன். அப்படித்தான் வில்லனாக நடிக்கலாம் என்ற எண்ணம் வந்தது. இதனைத் தொடர்ந்து மிக நீளமாக முடி வளர்க்கத் தொடங்கினேன். நடுவில் சினிமாவில் நடிப்பதற்கான ஆடிஷனல் பங்கேற்றேன். ஒரு மூன்று படங்களில் மெயின் வில்லனாக நடித்திருக்கிறேன்.
அப்படியான நிலையில் இயக்குனர் குமரன் சிறகடிக்க ஆசை என்று சீரியலை எடுப்பதாக தெரிந்த ஒருவர் சொன்னார். ஆடிஷன் சென்று சிட்டி கேரக்டருக்கு தேர்வு செய்யப்பட்டேன்.
தடைகளை கடந்து கிடைத்த வாய்ப்பு
எனக்கு சொந்த ஊர் உடுமலைப்பேட்டை அருகே இருக்கும் ஒரு கிராமம் ஆகும். பள்ளிப்படிப்பு கிராமத்தில் அமைந்திருக்கும் பள்ளியில் அமைந்த நிலையில் இன்ஜினியரிங் மட்டும் பழனியில் படித்தேன். படிக்கும் காலத்தில் நடிப்பில் ஒரு ஆர்வம் இருந்தாலும் மற்றொரு பக்கம் விளையாட்டில் கவனம் செலுத்தியதால் தொடர்ந்து அதன்பின்னால் சென்று கொண்டிருந்தேன்.
தடகளத்தில் விளையாடி மாநில மற்றும் தேசிய அளவில் விருது பெற்றுள்ளேன். அதற்கு மேல் சரியான வழிகாட்டுதல் இல்லாததால் செல்ல முடியவில்லை. படிப்பு முடிந்தவுடன் வேலைக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டிருந்தது. அதற்காக சென்னைக்கு வந்து மூன்று ஆண்டுகள் வேலை பார்த்தேன். அதேசமயம் சினிமா கனவும் என்னுடன் தொடர்ந்து கொண்டிருந்தது. அதற்காகவும் முயற்சித்துக் கொண்டிருந்தேன்.
ஒரு கட்டத்தில் இரண்டையும் கையாள முடியாததால் வேலையை விட்டுவிட்டு முழுமூச்சாக சினிமாவில் வாய்ப்பு தேடி இறங்கி விட்டேன். பத்து ஆண்டு காலமாக சினிமாவில் போராடி வந்த எனக்கு சிறகடிக்க ஆசை சீரியலில் வரும் சிட்டி கேரக்டர் நல்ல அடையாளத்தை கொடுத்துள்ளது. இதற்கு முழு காரணம் இயக்குனர் குமரனை சேரும்.
நடிகர் கார்த்தியின் சென்னை வாழ்க்கை
View this post on Instagram
சென்னையில் நான் மின் பொறியாளராக பணியாற்றி வந்தேன். ஒரு மூன்று கம்பெனிக்கு பொறுப்பாளராக இருந்தேன். நிறைய போராட்டங்களை கடந்து தான் சினிமாவிற்குள் வந்தேன். நான் கடந்த 10 ஆண்டுகளில் 300 ஆடிஷன்களில் பங்கேற்றுள்ளேன். சில பேர் படம் எடுக்க வருவார்கள். ஆனால் ஆடிஷனுக்கு முன்னாடியே அப்படம் கைவிடப்பட்டிருக்கும். இன்னும் சில பேர் ஆடிஷனில் நீங்கள் தேர்வாகி விட்டீர்கள் என சம்பளம் கூட பேசுவார்கள். ஆனால் அதன் பிறகு ஏதோ ஒரு காரணத்தால் படத்தை எடுக்காமல் இருப்பார்கள். இன்னும் சிலர் படத்தை எடுத்தாலும் அதை ரிலீஸ் செய்ய முடியாத சூழலில் சிக்கியிருப்பார்கள். இப்படிப்பட்ட சூழலை நான் எதிர்கொண்டுள்ளேன்.
சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்க தொடங்கிய பிறகு நான் சில ஆடிஷன்களில் பங்கேற்றேன். அதில் ஒரு சில இடங்களில் என்னை சிட்டி கேரக்டரை நினைவில் வைத்து அங்கீகாரம் செய்தார்கள். அதன் மூலம் எனக்கு இரண்டு பட வாய்ப்புகள் வந்தது” என நடிகர் கார்த்தி கூறியிருப்பார்.