இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குநர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் அட்லி… முதல் இரண்டு இடங்களில் யார் தெரியுமா?
Director Atlee Salary: தற்போது சினிமா வட்டாரங்களில் அட்லியின் அடுத்தப் படம் குறித்த அப்டேட் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி தற்போது அல்லு அர்ஜுன் உடன் இணைந்துள்ளார் அட்லி. இந்தப் படத்தின் அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் அல்லு அர்ஜுனின் பிறந்த நாளை முன்னிட்டு ஏப்ரல் மாதம் 8-ம் தேதி 2025-ம் ஆண்டு வெளியிட்டது.

இயக்குநர் அட்லி
இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குநர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் இயக்குந அட்லி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். கோலிவுட் சினிமாவில் பிரமாண்ட இயக்குநர் என்று கொண்டாட்ப்படுபவர் இயக்குநர் ஷங்கர். இவரது உதவி இயக்குநர்கள் பலர் தற்போது முன்னணி இயக்குநர்களாக சினிமாவில் கலக்கிக்கொண்டுள்ளனர். அந்த வரிசையில் இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் இயக்குநர் அட்லி. இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் உருவான விஜயின் நண்பன் மற்றும் ரஜினிகாந்தின் எந்திரன் ஆகிய இரண்டு படங்களிலும் இயக்குநர் அட்லி உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். அதனை தொடர்ந்து கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் கோலிவுட் சினிமாவில் இயக்குநராக தடம் பதித்தார் அட்லி. நடிகர்கள் ஆர்யா, ஜெய், நஸ்ரியா, நயன்தாரா, சந்தானம், சத்யராஜ் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்திருந்தது.
இந்தப் படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்திருந்தார். காதல் தோல்விக்குப் பின்பு அமையும் வாழ்க்கையும் நல்லா தான் இருக்கும் என்பதை கருவாகக் கொண்டு இந்தப் படத்தை எடுத்திருப்பார் இயக்குநர் அட்லி. இந்தப் படத்திற்கு முன்பு நடிப்பிற்கு சிறிது காலம் நடிக்காமல் இருந்த நயன்தாராவிற்கு ராஜா ராணி படம் ஒரு கம்பேக் என்றே ரசிகர்கள் கூறிவந்தனர்.
முதல் படமே அட்லிக்கு சூப்பர் ஹிட் கொடுத்ததைத் தொடர்ந்து அடுத்ததாக தளபதி விஜயுடன் கூட்டணி வைத்தார் இயக்குநர் அட்லி. இவர்களது கூட்டணியில் உருவான தெறி படமும் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமைய அடுத்தடுத்து மெர்சல், பிகில் என இரண்டு படங்களையும் விஜயை வைத்தே எடுத்தார் இயக்குநர் அட்லி. நெட்டிசன்கள் இதுகுறித்து இணையத்தில் கிண்டலடித்தபோது ‘என் அண்ணனுக்கு நான் தான்டா செய்வேன்’ என்று மாஸ் ரிப்ளை கொடுத்தார் அட்லி.
நடிகர் விஜய்க்கு தொடர்ந்து 3 படங்களை ஹிட் கொடுத்த அட்லிக்கு அடுத்த ஆஃபர் பாலிவுட்டில் இருந்து வந்தது. அதன்படி நடிகர் ஷாருக்கான் உடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு அட்லியை தேடி வந்தது. அதனை தொடர்ந்து இயக்குநர் ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ என்ற படத்தை இயக்கினார் அட்லி.
பாலிவுட்டையே மிரள வைக்கும் அளவிற்கு இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரூபாய் 1000 கோடியை தாண்டியது. இந்தப் படத்தில் தீபிகா படுகோன், நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு, பிரியாமணி என பல தமிழ் நடிகர்களை நடிக்க வைத்திருப்பார் இயக்குநர் அட்லி. இந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு பாலிவுட் திரையுலகிலேயே கவனம் செலுத்த தொடங்கிவிட்டார் அட்லி.
இந்த நிலையில் தற்போது இயக்குநர் அட்லி இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் இயக்குநர்களின் பட்டியளில் 3 இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அவர் ஒரு படத்திற்கு 100 கோடி வரை சம்பளம் வாங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பட்டியலில் முதலிடத்தில் இயக்குநர் ராஜமௌலி ஒரு படத்திற்கு ரூபாய் 200 கோடி வரை சம்பளம் வாங்குவதாகவும், இரண்டாவது இடத்தில் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா உள்ளார். அவர் ஒரு படத்திற்கு ரூபாய் 100 முதல் ரூபாய் 150 கோடி வரை சம்பளம் வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.