உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு… திருமண வாழ்க்கையில் 25 வருடங்களை நிறைவு செய்த அஜித் – ஷாலினி!

Ajith - Shalini 25th Wedding Anniversary: சினிமாவில் நடிப்பவர்களும் வேலை செய்பவர்களும் ஒருவொரை ஒருவர் காதலித்து திருமணம் செய்வது தொடர்ந்து நடைபெறும் ஒன்றாக இருந்தாலும் அதில் எத்தனை ஜோடிகளின் திருமணம் வெற்றிகரமாக இருந்தது என்பதை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த வரிசையில் ரசிகர்களின் மிகவும் ஃபேவரட் ஜோடி அஜித் - ஷாலினி ஆவர்.

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு... திருமண வாழ்க்கையில் 25 வருடங்களை நிறைவு செய்த அஜித் - ஷாலினி!

அஜித் - ஷாலினி

Published: 

24 Apr 2025 18:19 PM

தென்னிந்திய திரையுலகில் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்படும் ஜோடிகளில் ஒன்று அஜித் குமார் – ஷாலினி (Ajith – Shalini) ஆகும். இன்று, அவர்கள் தங்களது 25 வது ஆண்டு திருமண நாள் விழாவைக் கொண்டாடி வருகிறார்கள். இருவரும் கடந்த 2000-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் ​​1999 ஆம் ஆண்டு இணைந்து நடித்த அமர்களம் திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் தான் முதல் முறையாக சந்தித்து உள்ளனர். அந்தப் படத்தின் படப்பிடிப்பில் அஜித் குமாருக்கு ஷாலினி மீது காதல் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அவர்களின் காதல் கதை தொடங்கியது. இந்த நிலையில் இன்று அவர்கள் தங்கள் திருமண ஆண்டு விழாவைக் கொண்டாடும் நிலையில் அவர்களுக்கு திரைப் பிரபலங்களும். ரசிகர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அமர்களம் படத்தில் ஏற்பட்ட சந்திப்பு:

இயக்குநர் சரண் இயக்கத்தில் 1999-ம் ஆண்டு வெளியான படம் அமர்களம். இந்தப் படத்தில் நடிகர்கள் அஜித் குமார் மற்றும் ஷாலினி இருவரும் இணைந்து முதல்முறையாக நடித்திருந்தனர். முதலில் இந்தப் படத்தில் நடிக்க நடிகை ஷாலினி சம்மதிக்கவில்லை. அதனைத் தொடந்து நடிகர் அஜித் குமார் அவரிடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவர் இந்தப் படத்தில் நடித்தார் என்று முன்னதாக இயக்குநர் சரண் தெரிவித்திருந்தார். நடிகர் அஜித் குமாருக்கு இந்தப் படம் 25-வது படம் ஆகும். இந்த ஜோடி இருவரும் இணைந்து நடித்தது இந்த படம் மட்டுமே. இந்தற்கு பிறகு இவர்கள் இருவரும் எந்தப் படத்திலும் இணைந்து நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்திற்கு ஷாலினி மீது ஏற்பட்ட காதல்:

அமர்களம் படத்தின் படப்பிடிப்பின் முதல் நாளிலேயே நடிகர் அஜித்திற்கு ஷாலினி மீது காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர் அதனை வெளிப்படையாக கூறவில்லை. பிறகு படப்பிடிப்பில் ஒரு காட்சியில் ஷாலியின் கையை எதிர்பாராத விதமாக நடிகர் அஜித் கட் செய்திவிட்டாராம். அப்போது பதறிப்போன அஜித் முதல் உதவி செய்துவிட்டு அக்கறையாக ஷாலினியை கவனித்துக்கொண்டுள்ளார்.

இதனைப் பார்த்த ஷாலினிக்கும் அஜித் மீது விருப்பம் ஏற்பட்டுள்ளது. மேலும் படத்தின் இயக்குநரிடம் தனக்கு ஷாலினியை பிடித்திருக்கும் விசயத்தையும் அவர் மீது காதல் ஏற்பட்டு விடுமோ என்றும் கூறியதாக படத்தின் இயக்குநர் சரண் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். இந்த ஜோடி இருதியாக தங்கள் காதலை வெளிப்படுத்திக்கொண்டு இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டனர்.

இவர்களது திருமணத்தில் ஒட்டுமொத்த திரையுலகமே கூடி இந்த ஜோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். மேலும் இவர்களுக்கு அனௌஷ்கா மற்றும் ஆத்விக் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். மேலும் தொடர்ந்து கார் ரேஸில் வெற்றி, படங்களின் வெற்றிகளுடன் மகிழ்ச்சியாக இந்த திருமண நாளை கொண்டாடி வருகிறார் அஜித்.