இத்தனை நாள் அமைதியாக இருக்க இதுதான் காரணம் – நடிகை நஸ்ரியா நசீம் இன்ஸ்டா போஸ்ட்
Actress Nazriya Nazim Insta Post: நடிகை நஸ்ரியா நசீம் சமீபத்தில் அனைத்து விதமான சமூக தொடர்புகளில் இருந்தும் விலகி இருந்ததற்கு கரணம் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் என்றும் அதற்காக என்னை மன்னித்துவிடுங்கள் உங்களது ஆதரவிற்கு நன்றி என ரசிகர்களுக்கு இன்ஸ்டா பதிவு மூலம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2006-ம் ஆண்டு மலையாளத்தில் நடிகை நஸ்ரியா நசீம் (Nazriya Nazim) பளுங்கு என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார் நஸ்ரியா நசீம் தற்போது நாயகியா வலம் வருகிறார். கடந்த 2013-ம் ஆண்டு மாட் டாட் என்ற மலையாளப் படத்தில் நாயகியாக அறிமுகம் ஆனார் நடிகை நஸ்ரியா நசீம். அதனை தொடர்ந்து இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் இவரது நடிப்பில் வெளியான ’நேரம்’ படம் தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை கொடுத்தது. நடிகை நஸ்ரியா நசீம் தொடர்ந்து தமிழில் ராஜா ராணி (Raja Rani), நய்யாண்டி, திருமணம் என்னும் நிக்கா ஆகிய படங்களில் நடித்தார். இந்த படங்கள் அனைத்தும் தமிழ் ரசிகர்களிடையே நஸ்ரியாவிற்கு நல்ல வரவேற்பை அளித்தது.
அதனை தொடர்ந்து கடந்த 2014-ம் ஆண்டு இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடித்த வாயை மூடி பேசவும் படத்தில் நாயகியாக நடித்தார். பின்னர் 2014-ம் ஆண்டே அஞ்சலி எழுதி இயக்கிய பேங்களூர் டேஸ் என்ற படத்தில் நடித்தார் நஸ்ரியா. இதில் துல்கர் சல்மான் மற்றும் நிவின் பாலி இருவரும் நஸ்ரியாவின் கசின்களாக நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் பகத் பாசில் நஸ்ரியாவின் கணவராக நடித்திருப்பார். இந்தப் படத்தில் ஏற்பட்ட காதலால் தற்போது இவர்கள் இருவரும் நிஜத்திலும் கணவன் மனைவியாக வாழ்ந்து வருகின்றனர். திருமணத்திற்கு பிறகு சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்த நடிகை நஸ்ரியா நசீம் மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
அதன்படி இறுதியாக இவரது நடிப்பில் மலையாளத்தில் சூக்ஷ்மதர்ஷினி என்ற படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் இவருடன் இணைந்து நடிகர்கள் பேசில் ஜோசஃப், தீபக் பரம்போல், மெரின் பிலிப், சித்தார்த் பரதன், பூஜா மோகன்ராஜ் அகில பார்கவன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
க்ரைம் த்ரில்லரை மையமாக வைத்து உருவான இந்தப் படத்தின் நடிகை நஸ்ரியாவின் நடிப்பு ரசிகர்களால் பாராட்டைப் பெற்றது. இந்த நிலையில் இந்தப் படத்தின் விளம்பர பணிகளுக்கு பிறகு நடிகை நஸ்ரியா தனது சமூக வலைதள பக்கங்களில் இருந்தும் பொது வெளிகளிலும் காட்சி அளிக்காமல் இருந்தார்.
நடிகை நஸ்ரியா நசீம் வெளியிட்ட இன்ஸ்டா பதிவு:
View this post on Instagram
இதுகுறித்து நடிகை நஸ்ரியா நசீம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ”நீங்க எல்லாரும் நல்லா இருக்கீங்கன்னு நான் நம்புகிறேன். நான் ஏன் சில நாட்களாக பொது வெளிகளிலும் சமூக வலைதளங்களிலும் காணவில்லை என்பது குறித்து கூற விரும்புகிறேன்.
உங்களில் பலருக்குத் தெரியும், இந்த அற்புதமான சமூக வலைதளத்தில் நான் எப்பவும் ஒரு மிகச்சிறந்த நபராக இருந்து வருகிறேன் என்று. ஆனா, கடந்த சில மாதங்களா, என் வாழ்க்கையில் சில தனிப்பட்ட காரணங்களுக்காக நான் இதில் இருந்து விலகி இருந்தேன். சொந்த காரணங்களால் இந்த தளத்தில் தொடர்ந்து என்னால் ஆக்டிவாக இருக்க முடியவில்லை.
மேலும் என்னால் எனது 30-வது பிறந்த நாளையும் கொண்டாட இயலவில்லை. எனது சூக்ஷ்மதர்ஷினி படத்தின் வெற்றி விழாவில் கூட கலந்துக் கொள்ள இயலவில்லை என்றும் நடிகை நஸ்ரியா நசீம் வருத்தம் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், நான் காணாமல் போனதற்கான காரணத்தை விளக்காததற்கும், தொலைப்பேசி அழைப்பு மற்றும் மெசேஜ்களுக்கு பதிலளிக்காததற்கும் எனது அனைத்து நண்பர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
என்னால் ஏற்பட்ட ஏதேனும் கவலை அல்லது சிரமத்திற்கு நான் உண்மையிலேயே வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தெரிவித்தார். மேலும் இப்படி இத்தனை நாட்களாக காணாமல் போனதற்கு எனது நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு விளக்கம் அளிக்க விரும்பினேன். அதனால் இந்த பதிவை வெளியிடுகிறேன்” என்று அவர் தெரிவித்திருந்தார்.