எனக்கு பிடித்த ரீல் ஜோடி இவர்கள் தான்… நடிகர் பிரசாந்த் சொன்னது யாரை தெரியுமா?
Actor Prashanthabout his Favorite Pair: 1990 முதல் 2000 வரை ஒரு டிகேடாக தமிழ் சினிமாவில் கொடிக்கட்டிப் பறந்தார் நடிகர் பிரசாந்த். தமிழில் முன்னணி இயக்குநர்களாக திகழ்ந்த இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, மணிரத்னம், ஷங்கர், ராசு மதுரவன், பிரவீன்காந்த், சுந்தர் சி ஆகியோரின் இயக்கத்தில் சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் பிரசாந்திற்கு பிடித்த ரீல் லைஃப் ஜோடி யார் என்பது குறித்து பேட்டி ஒன்றில் அவர் வெளிப்படையாக பேசியது தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது. பிரபல நடிகரும் இயக்குநருமான தியாகராஜனின் மகன் தான் நடிகர் பிரசாந்த். 1973-ம் ஆண்டு ஏப்ரல் 6-ம் தேதி பிறந்தார். இயக்குநர் ராதா பாரதி இயக்கத்தில் கடந்த 1990-ம் ஆண்டு வெளியான வைகாசி பொறந்தாச்சு என்கின்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் தான் நடிகர் பிரசாந்த். நடித்த முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்ததோடு சிறந்த அறிமுக நடிகருக்கான ஃபிலிம்பேர் விருதையும் வென்றார் நடிகர் பிரசாந்த். அதனை தொடர்ந்து செம்பருத்தி, ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள், ஜோடி, மஜ்னு, திருடா திருடா என பல சூப்பர் ஹிட் படத்தில் நடித்துள்ளார் பிரசாந்த்.
2005-ம் ஆண்டிற்கு பிறகு நடிகர் பிரசாந்தின் நடிப்பில் வெளியான படங்கள் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை என்றே கூறலாம். ஆம் அதற்கு அவரது சொந்த வாழ்க்கையும் ஒரு காரணமாக அமைந்தது. கடந்த 2005-ம் ஆண்டு கிரகலட்சுமி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார் பிரசாந்த்.
அந்த திருமண வாழ்க்கை சரியாக அமையாத காரணத்தால் இருவருக்கும் விவாகரத்து ஆகிவிட்டது. அதனை தொடர்ந்து பெரிய அளவில் படங்கள் எதுவும் நடிக்காமல் இருந்தார் பிரசாந்த். தெலுங்கில் ராம் சரணின் வினய விதேய ராமா படத்தில் அவருக்கு அண்ணனாக நடித்ததைப் பார்த்த ரசிகர்கள் எப்படி இருந்த நடிகர் இவர் என்று வேதனை தெரிவித்தனர்.
பிறகு தமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரசாந்தின் படம் குறித்த அறிவிப்பை அவரது அப்பா தியாகராஜன் வெளியிட்டார். அதன்படி இந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த அந்தாதூன் என்ற படத்தின் தமிழ் பதிப்பு உரிமையை பெற்றுள்ளதாகவும் அந்தப் படத்தில் பிரசாந்த் நாயகனாக நடிக்க உள்ளதாகவும் அதை தானே இயக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து அந்தப் படத்தின் படப்பிடிப்புகள் நடைப்பெற்று கடந்த 2024-ம் ஆண்டு அந்தகண் என்ற பெயரில் தமிழ்ல் வெளியானது. நீண்ட நாட்களுக்கு பிறகு திரையில் பிரசாந்தைப் பார்த்த ரசிகர்கள் படத்திற்கு வரவேற்பை அளித்தனர். அதனை தொடர்ந்து கடந்த 2024-ம் ஆண்டு விஜயின் நடிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான கோட் படத்திலும் பிரசாந்த் நடித்திருந்தார்.
இந்த நிலையில் முன்னதாக நடிகை சிம்ரன் உடன் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பிரசாந்திடம் சிம்ரன் உடன் வேறு எந்த நடிகர் நடிப்பது உங்களுக்கு பிடிக்கும் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த பிரசாந்த் சிம்ரன் மற்றும் விஜய் ஜோடியை தனக்கு திரையில் பார்க்க பிடிக்கும் என்றும் அந்த ஜோடியின் கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.