EPFO : இபிஎஃப்ஓ வழங்கும் ஓய்வூதிய திட்டங்கள்.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
EPFO Pension Scheme | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம், பணியாளர்களுக்கு பல வகையான சிறப்பு அம்சங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில், இபிஎஃப்ஓ வழங்கும் ஓய்வூதிய திட்டங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் (EPFO – Employee Provident Fund Organization) கீழ், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஊழியர்களின் பெயர்களிலும் கணக்கு தொடங்கப்பட்டு அதில் மாதம் மாத குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு வரவு வைக்கப்படும். இந்த பணத்தை ஊழியர்கள் தங்களின் பணி காலத்தின் போதோ அல்லது பணி ஓய்வு பெற்ற பிறகோ எடுத்துக்கொள்ளலாம்.
ஊழியர்கள் தங்களது பணி காலம் முழுவதும் பிஎஃப் (PF – Provident Fund) பணத்தை எடுக்கவில்லை என்றால், ஓய்வு பெற்ற பிறகு மாதம் மாதம் ஓய்வூதியமாக பெற்றுக்கொள்ளலாம். ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதியம் பெறும் வகையில் பல வகையான ஓய்வூதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், இபிஎஃப்ஓ-ல் உள்ள ஓய்வூதிய திட்டங்கள் என்ன, அதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இபிஎஃப்ஓ வழங்கும் ஓய்வூதிய திட்டங்கள்
இபிஎஃப்ஓ தனது பயனர்களுக்கு மிகவும் பாதுகாப்பான ஓய்வூதிய திட்டங்களை வழங்கி வருகிறது. அதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இபிஎஃப்ஓ பொது ஓய்வூதிய திட்டம்
இந்த இபிஎஃப்ஓ பொது ஓய்வூதிய திட்டத்தின் (EPFO General Pension Scheme) கீழ் ஒரு ஊழியர் 10 ஆண்டுகள் பணிபுரிந்து, அவருக்கு வயது 58-ஐ கடந்திருந்தால் அவருக்கு ஓய்வூதியம் பெற உரிமை உண்டு. ஒருவேளை பணியாளர் விரும்பினால் தனது ஓய்வூதியத்தை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகும் பெற அனுமதி வழங்கப்படுகிறது. அதன் பிறகும் பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் 4 சதவீதம் கூடுதல் விகிதத்தில் ஓய்வூதியம் கிடைக்கும்.
இபிஎஃப்ஓ இயர்லி ஓய்வூதிய திட்டம்
இபிஎஃப்ஓவின் இந்த இயர்லி ஓய்வூதிய திட்டத்தின் (EPS – Early Pension Scheme) கீழ் ஊழியர்கள் தங்களின் ஓய்வு காலத்திற்கு முன்னரே ஓய்வூதியம் பெறலாம். ஊழியர் விரும்பினால் அவர் 58 வயதுக்கு முன்னரே ஓய்வூதியத்துக்கு விண்ணப்பிக்கலாம். அவ்வாறு முன்கூட்டியே ஓய்வூதியம் பெரும் பட்சத்தில் ஒவ்வொரு ஆண்டும் 4 சதவீதம் குறைவான வருடாந்திர விகிதத்தில் வட்டி வழங்கப்படும்.
அனாதை ஓய்வூதியம்
இபிஎஃப்ஓ-ல் அனாதை ஓய்வூதியம் (Orphan Pension) வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஊழியர் உயிரிழந்துவிட்டாலோ, வாழ்க்கை துணை இல்லை என்றாலோ அல்லது துணை ஏற்கனவே உயிரிழந்துவிட்டாலோ ஊழியரின் குழந்தைகளுக்கு 25 வயது முடியும் வரை ஓய்வூதியம் வழங்கப்படும்.
விதவை ஓய்வூதியம்
இபிஎஃப்ஓ விதவை ஓய்வூதியம் (Widow Pension) வழங்கி வருகிறது. இந்த திட்டத்தில் ஊழியர் உயிரிழந்துவிட்டால் அவரது வாழ்க்கை துணைக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.
நாமினி ஓய்வூதியம்
இபிஎஃப்ஓ நாமினி ஓய்வூதியம் (Nominee Pension) திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் ஊழியர் உயிரிழந்துவிட்டால், அவர் உயிருடன் இருக்கும்போது ஓய்வூதியம் பெற யாரையேனும் நாமினியான நியமனம் செய்திருந்தால் அந்த நபருக்கு ஓய்வூதியம் கிடைக்கும்.
மேற்குறிப்பிட்ட இந்த ஓய்வூதிய திட்டங்களின் மூலம் ஆண்டுதோறும் ஏராளமான ஊழியர்கள் பயனடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.