ஒரிஜினலைப் போலவே அச்சு அசல் போலி ரூ.500 நோட்டுக்கள் – எப்படி கண்டுபிடிப்பது?
Fake 500 Rupees Notes: மத்திய உள்துறை அமைச்சகம் போலியான ரூ.500 நோட்டுகள் சந்தையில் பரவியிருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. உண்மையான 500 ரூபாய் நோட்டுகளைப் போலவே இருக்கும் இந்த போலியான நோட்டுக்களில் “RESERVE” என்ற வார்த்தையில் “E” என்ற எழுத்திற்குப் பதிலாக “A” என தவறாக எழுதப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மாதிரி புகைப்படம்
கள்ள நோட்டுக்கள் (Fake Notes) என்பது இந்தியாவில் (India) பல ஆண்டுகளாக பிரச்னைக்குரிய விஷயமாக இருந்து வருகிறது. கள்ள நோட்டுக்களை சற்று கூர்ந்து கவனித்தால் கண்டுபிடிக்க முடியும். இந்த நிலையில் தற்போது உண்மையான 500 ரூபாய் நோட்டுக்களை போல தத்ரூபமான போலி ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புலனாய்வு துறையின் தகவலின்படி இந்திய உள்துறை அமைச்சகம் (Ministry of Home Affairs) ஏப்ரல் 21, 2025 அன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி உண்மையான 500 ரூபாய் நோட்டுக்களைப் போலவே போலியான ரூ.500 நோட்டுக்களை புழக்கத்தில் விடப்பட்டிருப்பதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. உண்மையான ரூ.500 நோட்டுக்களை போலவே அச்சு அசலாக போலியான நோட்டுக்கள் உருவாக்கப்பட்டிருப்பதாகவும், அதனால் போலியான நோட்டுக்களை எளிதில் கண்டறிய முடியாது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
போலி ரூபாய் நோட்டுக்களை கண்டறிவது எப்படி?
இந்த நிலையில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியின் படி, இந்த போலி 500 ரூபாய் நோட்டுக்களை கண்டறிவதற்கு ஒரு அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன் படி இந்த 500 ரூபாய் நோட்டில் எழுத்துப் பிழை உள்ளதாகவும் அதனை வைத்து அது உண்மையானதா? அல்லது போலியானதா? என கண்டறியலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது. அதன் படி RESERVE BANK OF INDIA என்ற ஆங்கில வார்த்தையில் E என்ற எழுத்துக்கு பதிலாக A இடம்பெற்றுள்ளதாக அறிவுறுத்தியுள்ளது. இதனை வைத்து அது போலியானா நோட்டா இல்லையா என கண்டறியலாம். இந்த மிகச் சிறிய மாற்றமாக இருப்பதால் எளிதில் கண்டறிய முடியாது எனவும் அதனை மிக தீவிரமாக கண்காணிக்குமாறும் மத்திய உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
பயன்பாட்டில் உள்ள ரூ.500 நோட்டுக்கள்?
இதுதொடர்பாக நிதித்துறை, வங்கிகள், இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம், நிதி புலனாய்வு அமைப்பு,சிபிஐ, அதிக நிதியை கையாளும் நிறுவனங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் RESERVE BANK OF INDIA என்ற வார்த்தையில் உள்ள பிழையைத் தவிர வேறு எந்த மாற்றமும் இல்லாததால் மிக துல்லியமாக கண்காணிக்குமாறும் தெரிவித்துள்ளது. இந்த போலியான ரூபாய் நோட்டுக்கள் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளதாகவும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது. யாராவது போலியான ரூபாய் நோட்டுக்களை கண்டறிந்தால் உடனடியாக புகார் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக ஒரு மூத்த விசாரணை அதிகாரியிடம், இந்திய சந்தையில் எவ்வளவு அளவில் போலி நோட்டுகள் பரவியுள்ளன என்பது குறித்து கேட்கப்பட்ட போது, இப்படியான போலி நோட்டுகள் ஒருமுறை பரவத் தொடங்கினால், எந்த நிறுவனமும் அதன் சரியான அளவைத் துல்லியமாக மதிப்பிட முடியாது . ஏனெனில், வங்கிகளுக்கு பொதுமக்கள் சமர்ப்பிக்கும் போலி நோட்டுகள் குறித்த ஆதாரங்கள் மட்டுமே தற்போது கிடைத்துள்ளது. இருப்பினும், உண்மை என்னவென்றால், அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட பல மடங்கு அதிகமாகவே போலி நோட்டுகள் பரவியிருக்க வாய்ப்பு இருக்கிறது என்றார்.