புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?.. ஆன்லைன் மூலம் சுலபமாக செய்து முடித்துவிடலாம்!
How to Apply Ration Card | இந்தியாவில் உள்ள குடும்பங்களுக்கு ரேஷன் கார்டு ஒரு முக்கிய அடையாள ஆவணமாக உள்ளது. இந்த நிலையில், ஆன்லைன் மூலம் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் செயல்படுத்தப்படும் சிறந்த திட்டங்களில் ஒன்றாக ரேஷன் கார்டு (Ration Card) திட்டம் உள்ளது. காரணம், ரேஷன் கார்டுகள் மூலம் பொதுமக்களுக்கு பல்வேறு விதமான உதவிகள் வழங்கப்படுகிறது. பசியில்லா நாட்டை கட்டமைக்கும் வகையில், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான் குடும்பங்கள் பலனடைந்து வருகின்றன.
ரேஷன் கார்டு திட்டம் ஏழை, எளிய மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. குறைந்த பொருளாதாரம் (Economy) மற்றும் வறுமை (Poverty) காரணமாக தங்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள முடியாமல் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு இந்த திட்டம் மூலம் உணவளிக்கப்படுகிறது. ரேஷன் கார்டு மூலம் வறுமை கோட்டின் கீழ் உள்ள குடும்பங்களுக்கு விலையில் அரிசி, பருப்பு உள்ளிட்ட தானியங்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன.
ரேஷன் கார்டுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்
இந்தியாவை பொருத்தவரை ரேஷன் கார்டுகள் குடும்பங்களின் அடையாக அட்டையாக திகழ்கின்றன. இதன் காரணமாக, அனைத்து குடும்பங்களுக்கும் ரேஷன் கார்டு கட்டாயமாக உள்ளது. ஆனால், குடும்பங்களின் ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளில் மாற்றம் செய்யப்படும்.
உதாரணமாக, ஒரு குடும்பம் வறுமை கோட்டின் கீழ் உள்ளது என்றால், அந்த குடும்பதுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அனைத்து வகையான தானியங்களும், உணவு பொருட்கள் மற்றும் உதவிகள் வழங்கப்படும். இதுவே ஒரு குடும்பம் வறுமை கோட்டின் மேல் இருந்து குடும்ப உறுப்பினர்கள் வருமான வரி செலுத்தும் நபர்களாக இருப்பின் அவர்களுக்கு எந்த வித சலுகையும் வழங்கப்படாது. அவர்களுக்கு ஆதாரமாக குடும்ப அட்டை மட்டும் வழங்கப்படும்.
திருமணமான தம்பதிகள் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு திருமண அழைப்பிதழ் அல்லது திருமண சான்றிதழ் உள்ளிட்டவற்றை ஆதாரமாக சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரரின் பின்னணி விவரங்கள் குறித்த ஆராய்ச்சிகளுக்கு பிறகு அவர்களுக்கு ரேஷன் கார்டு வழங்க வேண்டுமா, இல்லையா என்பது குறித்து முடிவு செய்யப்பட்டு 15 முதல் 20 நாட்களில் ரேஷன் கார்டு வழங்கப்படும்.
புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
- அதற்கு முதலில் அரசின் TNPDS (Tamil Nadu Public Distribution System) இணையதளமான https://www.tnpds.gov.in/ செல்ல வேண்டும்.
- அங்கு வலது பக்கத்தில் இருக்கும் மின்னணு அட்டை சேவைகள் என்பதை கிளிக் செய்து, புதிய மின்னணு அட்டை விண்ணப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
- தற்போது புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் செய்வதற்கான பக்கம் தோன்றும்.
- அதில், குடும்ப தலைவர், தலைவி, குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள், முகவரி, மாவட்டம், மண்டலம், கிராமம், மொபைல் எண், பின்கோடு உள்ளிட்ட விவரங்களை பதிவிட வேண்டும்.
- பிறகு உங்களது ரேஷன் அட்டை எந்த வகையை சேர்ந்தது என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதாவது, அரிசி அட்டை, பண்டகமில்லா அட்டை என பல ஆப்ஷன்கள் தோன்றும்.
- பிறகு ரேஷன் கார்டுக்கு தேவையான ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட சான்றுகளை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- பிறகு குடும்ப தலைவர் அல்லது தலைவி யார் பெயரில் அட்டை வாங்க விரும்புகிறீர்களோ அவரது புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- பிறகு நீங்கள் பதிவு செய்த தகவல்கள் மற்றும் ஆவணங்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்த பின்னர், விண்ணப்பத்தை சமர்பிக்கலாம்.
- ரேஷன் கார்டு பெற நீங்கள் தகுதியானவர்கள் என்றால் உங்களது விண்ணப்பம் ஏற்கப்படும், இல்லையெனில் நிகாரிக்கப்படும்.
மேற்குறிப்பிட்ட இந்த முறையை பயன்படுத்தி மிக எளிதாக இணையதளத்தில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.